ETV Bharat / bharat

Karnataka Election: வேட்பாளரின் உறவினர் வீட்டில் காய்த்த பணம் - வருமான வரித்துறையினர் அதிர்ச்சி!

author img

By

Published : May 3, 2023, 7:04 PM IST

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளரின் உறவினர் எனக் கூறப்படும் நபரின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

IT Raid
IT Raid

மைசூர் : கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளரின் உறவினர் வீட்டில் மரத்தில் பணம் காய்த்த சம்பவம் வருமான வரித்துறை அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி, ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு கர்நாடகத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. சட்டமன்றத்தேர்தலுக்கு ஒரு வார காலம் மட்டும் உள்ள நிலையில் ஆட்சியைத் தக்கவைக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜகவும், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட இருபெரும் கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த நிலையில், ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது. ஓட்டுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தவிர்க்க தேர்தல் அலுவலர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மைசூரை சேர்ந்த கே சுப்ரமண்ய ராய் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சட்டவிரோதப் பணம் தொடர்பாக கிடைத்தப் புகாரில் சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுப்ரமண்ய ராயின் வீட்டில் சோதனை மேற்கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள், வீட்டுத்தோட்டத்தில் மரத்தின் அருகில் அலங்கரிக்கப்பட்ட கிளை போன்ற ஒன்றைப் பிரித்து சோதனையிட்டு உள்ளனர்.

பிரித்து பார்த்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதில் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்ததாக கூறப்படுகிறது. சுப்ரமண்ய ராய் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணமும், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் சுப்ரமண்ய ராய், புதூர் விதான் சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் எனக் கூறப்படும் நிலையில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதற்காக இந்தப் பணம் வைக்கப்பட்டு இருந்ததா என விசாரணை நடத்தி வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர். கர்நாடக சட்டப்பேரவைத்தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கி உள்ள நிலையில், பொது மக்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகப் புகார் எழுந்து உள்ளது.

இதுவரை முறையான கணக்கு இல்லாத 309 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர். ஏறத்தாழ 23 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள், 74 கோடி ரூபாய் மதிப்பிலான மது, 80 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Actor Manobala : நடிகர் மனோபாலா மறைவு - முதலமைச்சர், திரைப்பிரபலங்கள் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.