ETV Bharat / bharat

லடாக் எல்லையில் அதிநவீன போர் கருவிகளை களமிறக்கிய இந்திய ராணுவம்.. பின்னணி என்ன?

author img

By

Published : Jul 8, 2023, 8:04 PM IST

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் அவசரகால சூழ்நிலைகளைச் சமாளிக்கவும், வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்திய ராணுவம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வேறு ஆயுதங்களை லடாக் எல்லையில் குவித்துள்ளது.

a
Etv Bharat

லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தில் அதிநவீன கருவிகள் குவிப்பு

லடாக்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை தகராறு என்பது முடிவு இல்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்திய எல்லையில் அவ்வப்போது அத்துமீறி நுழையும் சீனப் படையினரை நமது ராணுவ வீரர்கள் தடுத்து வருவதும், அதையும் மீறீ இரு நாட்டுப் படையினரிடையே சண்டை நிகழ்வதும் வாடிக்கையாக உள்ளது. அவசரக்கால சூழ்நிலைகளைச் சமாளிக்கவும், வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்திய ராணுவம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வேறு ஆயுதங்களை அறிமுகம் செய்துள்ளது.

அந்த வகையில் இது குறித்து களத் தகவல்களைத் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. லே, லடாக் ஆகிய எல்லைப் பகுதிகளான நியோமா என்ற இடத்திலிருந்து கள நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சுமார் 14,500 அடி உயரத்தில் அமைந்துள்ள அந்த ராணுவத் தளவாடத்தில் தனுஷ் ஹோவிட்ஸர் என்ற போர் கருவி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் லடாக் செக்டரில் சேர்க்கப்பட்ட தனுஷ் ஹோவிட்ஸர் 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாகக் குறி வைத்துத் தாக்கும் திறன் கொண்டது என ராணுவ உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

முழுவதும் இந்திய ஆயுத தொழிற்சாலையிலேயே மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த தனுஷ் ஹோவிட்ஸரில் குண்டுகளைச் சேமித்து வைத்து, சுமார் 10 முறைப் போர் செய்ய முடியும் எனவும், லடாக்கின் மேடு பள்ளங்களைக் கடந்து மிகவும் துல்லியமாக இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது எனக் கூறப்படுகிறது. மணிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் வரை விரைந்து சென்று தாக்கும் திறன் கொண்டது இந்த தனுஷ் ஹோவிட்ஸர்.

இது போன்ற இலகு ரக வாகனம் எதிரிகளை முன்னோக்கி விரைந்து சென்று தாக்க வசதியாக இருக்கும் எனவும், இது ராணுவ வீரர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் M4 ரக போர் வாகனங்கள் கடந்த ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த வாகனங்களின் எண்ணிக்கையைக் கிழக்கு லடாக் பகுதிகளில் அதிகரிக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது., இந்தியா - சீனா இடையே எல்லை போர் முற்றிய நிலையில் எல்லைப் பகுதியில் அந்தந்த நிலப்பரப்புக்கு ஏற்ப அதிநவீன ராணுவத் தளவாடங்களை இந்திய ராணுவம் நிலைநிறுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த வாகனம் நான்கு முதல் ஆறு ராணுவப் படைகளை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. அது மட்டுமின்றி, ராணுவ உபகரணங்களை எடுத்துச்செல்லவும், அவசரக்கால சூழலை எளிமையாகச் சமாளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டுமின்றி, 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மனிதர்களையும், 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாகனங்களையும் எளிதில் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு அதிநவீன கருவிகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் எதிரிகளின் இருப்பிடத்தை மிக எளிதாகக் கண்டறிய முடியும் என ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதோடு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கே-9 வஜ்ரா, சுயமாக இயக்கப்படும் பீரங்கிகள் கிழக்கு லடாக் செக்டார் பகுதியில் வெற்றிகரமாக இயக்கப்பட்ட நிலையில் அதையும் இந்திய ராணுவத்தில் கூடுதலாகச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி இந்தியா - சீனா எல்லைக்கோடுகள் முழுவதும் இந்திய ராணுவத்தின் அதி தொழில்நுட்ப வசதியுடன் கூடிய போர் ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுக் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, சீனாவுடன் 3 ஆயிரத்து 488 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த எல்லைப்பகுதியானது ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக செல்கிறது. மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த எல்லையின் மேற்குப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பகுதியில் இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட், கிழக்குப் பகுதியில் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த எல்லைகள் அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்படாத நிலையில் இந்தியா சீனா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் பொருட்படுத்தாமல் சீனா அத்துமீறியதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டி இருந்தது. அது மட்டுமின்றி எல்லைப்பகுதிகளில் சீனா மற்றும் இந்திய ராணுவம் தொடர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: West Bengal: பஞ்சாயத்து தேர்தலில் கலவரம்.. 11 பேர் படுகொலை! பாஜக - திரிணாமுல் இடையே கடும் போட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.