ETV Bharat / bharat

Gaganyaan: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் முதல்படி! சாதிக்குமா இஸ்ரோ?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 12:51 PM IST

Updated : Oct 20, 2023, 2:58 PM IST

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனையில் மாதிரி விண்கலத்தை நாளை இஸ்ரோ விண்ணில் செலுத்தி ஆய்வு மேற்கொள்கிறது. இந்த நிகழ்வை நேரலை செய்ய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

Isro
Isro

ஸ்ரீஹரிகோட்டா : விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நாளை (அக். 21) ஈடுபட உள்ளது. இந்த சோதனை முயற்சியை நேரலையாக வெளியிட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 (TV-D1) ராக்கெட் மூலம் நாளை (அக். 21) விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா நாடுகளை தொடர்ந்து விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நீண்ட நாட்களாக தீவிரம் காட்டி வருகிறது.

அதற்காக ககன்யான் திட்டத்தை உருவாக்கி நீண்ட காலமாக இஸ்ரோ ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ககன்யான் திட்டத்திற்கு முன்னதாக மூன்று கட்ட சோதனைகளை செய்து பார்க்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. அதன் முதற்கட்டமாக நாளை (அக். 21) ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் தரையில் இருந்து ஏறத்தாழ 400 கிலோ மீட்டர் தூரம் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி மீண்டும் அவர்களை பூமிக்கு அழைத்துவர இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ககன்யான் திட்டத்தை 2025ஆம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்குமுன்னதாகவே இந்த 3 கட்ட பரிசோதனைகளையும் செய்து முடிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அந்த வகையில் இஸ்ரோவின் முதல் கட்ட சோதனை நிகழ்வு ஹரிகோட்டாவில் உள்ள முதல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை (அக். 21) காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சோதனையில் மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்ல உள்ள மாதிரி விண்கலத்தை தரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரம் வரை அனுப்பி, மீண்டும் அதை பூமிக்கு கொண்டு வந்து வங்கக் கடலில் இறக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இந்த சோதனைக்கு டிவி-டி1 (TV-D1) எனும் பூஸ்டர் ராக்கெட்டை பயன்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. புவியில் இருந்து ராக்கெட் புறப்பட்டு சுமார் 17 கிலோ மீட்டர் உயரத்தில் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து விடும். அதை பாராசூட்கள் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் வங்கக் கடலில் பத்திரமாக இறக்கி சோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

மாதிரி விண்கலம் வங்கக் கடலில் விழுந்த உடன் விண்கலத்தை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : பங்காரு அடிகளார் செய்த புரட்சிகள் என்னென்ன?

Last Updated :Oct 20, 2023, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.