ETV Bharat / bharat

INDIA alliance mumbai meeting: ஒரே சின்னம், ஒரே கொடி ஃபார்முலாவை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி? - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 12:01 PM IST

One flag, One logo formula: மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக் கட்சிகள், நாடு முழுவதும் ஒரே சின்னம் மற்றும் ஒரே கொடியுடன் போட்டியிடுவது தொடர்பாக நாளை மும்பையில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

INDIA alliance
INDIA alliance

பாட்னா: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இதற்காக காங்கிரஸ் தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைத்துள்ளது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டார். அதன்படி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன.

இந்த எதிர்க்கட்சிகள் மக்களவைத் தேர்தலில் இணைந்து செயல்படுவது தொடர்பாகவும், தேர்தல் வியூகம் தொடர்பாகவும் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டன. முதற்கட்டமாக பீகார் மாநிலம் பாட்னாவில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பெங்களூரில் கடந்த ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய இக்கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைக்கப்பட்டது. அதன் பிறகு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே தேர்தல் பணிகளுக்காக 'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரை நியமிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்ட நிலையில், தனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்றும், அனைவரையும் இணைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் நிதிஷ்குமார் கூறியுள்ளார். எதிர்க்கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராகவும் நிதிஷ்குமார் நியமிக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், அதற்கும் நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நாளை(ஆஎஸ்ட் 31) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 1) நடைபெறவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்தியா கூட்டணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிற ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்துப் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், "இந்தியா கூட்டணிக் கட்சிகள், நாடு முழுவதும் ஒரே சின்னம் மற்றும் ஒரே கொடியுடன் போட்டியிடுவது தொடர்பாக மும்பை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மக்களவைத் தேர்தலில் ஒரே சின்னம், ஒரே கொடியில் போட்டியிட்டால் மக்களுக்கும் குழப்பம் இருக்காது. அதேநேரம் எதிர்க்கட்சிகள் இவ்வாறு போட்டியிட்டால் அது பாஜகவுக்கு சிக்கலை அதிகரிக்கும். மும்பையில் நடைபெறவுள்ள இந்த மூன்றாவது கூட்டம் நாட்டின் அரசியல் திசையை தீர்மானிக்கும்" என்றார்.

மேலும், இந்தியா கூட்டணிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசியுள்ளதாகவும், இது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், நிதிஷ்குமார் உள்ளிட்ட சிலரை தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: "குடும்ப தலைவிகளுக்கான ரூ.2000 உதவி தொகை விரைவில் தொடக்கம்" - முதலமைச்சர் சித்தராமையா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.