ETV Bharat / bharat

'மூட்டுவலியால்தான் தேர்தலில் நிற்கவில்லை' - நாராயணசாமி பளிச்

author img

By

Published : May 8, 2022, 10:09 AM IST

தோல்வி பயத்தால் நாராயணசாமி தேர்தலில் நிற்கவில்லை என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதற்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மூட்டுவலி சிகிச்சை காரணமாக தேர்தலில் நிற்கவில்லை என்றும் நான் தேர்தலுக்கு பயப்படுபவன் இல்லை என்றும் கூறியுள்ளார்.

நாராயணசாமி தகவல்
நாராயணசாமி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (மே 7) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்திய நாட்டில் கரோனாவின் பல்வேறு அலைகளால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கிட்டு பார்த்து இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் என மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், 2 தினங்களுக்கு முன்பு கரோனாவால் 40 லட்சத்து 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு அறிக்கை விடுத்தது மட்டுமல்லாமல், அதிகப்படியான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டதில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது என அறிவித்தது. மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்.

மூட்டுவலியால் தான் தேர்தலில் நிற்கவில்லை: மேலும், தோல்வி பயத்தால் நாராயணசாமி தேர்தலில் நிற்கவில்லை என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதற்கு பதிலளித்த நாராயணசாமி, 'மூட்டுவலி சிகிச்சை காரணமாக தேர்தலில் நிற்கவில்லை; நான் தேர்தலுக்கு பயப்படுபவன் இல்லை' என்றார்

என்னைப் பற்றி பேச தகுதியற்றவர்: மேலும் அவர், 'உள்துறை நமச்சிவாயம் வில்லியனூர் தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்று அமைச்சராக இருந்தவர். அவர் ஏன் இந்த முறை அந்த தொகுதியில் நிற்கவில்லை, தோல்வி பயமா? என மக்களிடத்தில் விளக்க வேண்டும். அவர் நின்றிருந்தால் நிச்சயமாக தோல்வியடைந்திருப்பார். அதனால் தான் மண்ணாடிப்பட்டில் நின்றார். என்னைப் பற்றி பேச அவருக்குத் தகுதியில்லை.

அமைச்சர் பதவிக்காக 5ஆவது கட்சி: இவர் காங்கிரஸில் சேரும்போது, அது அவருக்கு 5ஆவது கட்சி; இப்போது பாஜக சென்றுள்ளார். அடுத்த தேர்தலில் எந்த கட்சி என்று தெரியவில்லை. எங்கு பசுமையாக உள்ளதோ, அங்கு செல்வது அவர் வழக்கம். அவருக்கு அமைச்சர் பதவி வேண்டும்; கொள்ளையடிக்கவேண்டும்; சுகமாக வாழ வேண்டும். அதுதான் அவர் கொள்கை. அவரை நம்பி பாஜகவிற்கு போனவர்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். கட்சி மாறி செல்பவர்களுக்கு நாவடக்கம் தேவை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Hijab Issue: 'ஆர்எஸ்எஸ் கலாசாரத்தை கல்வி மையங்களில் பரப்பாதீங்க!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.