ராஜ்கர்க் : மத்திய பிரதேசம் மாநிலம் ராஜ்கர்க் மாவட்டம் பிப்லியா ரசோடா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி மாஹி, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. சிறுமி குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநில பேரிடர் மீட்பு படை சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 22 அடி ஆழத்தில் சிறுமி சிக்கி கொண்ட நிலையில், ஆழ்துளை கிணற்றின் அருகே 25 அடி ஆழம் குழி தோண்டி இன்று (டிச. 6) அதிகாலை சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில், முதல் கட்ட சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக தலைநகர் போபாலில் உள்ள ஹமிதியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், காலை சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆழ்துளை கிணற்றில் சிக்கி 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : காஷ்மீரில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து கோர விபத்து - 7 பேர் பலி!