ETV Bharat / bharat

ஆளுநரின் அதிகார வரம்பு என்ன? இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதல்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 5:06 PM IST

LEGISLATIVE POWERS OF THE GOVERNOR: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆளுநருக்கு உள்ள அதிகார வரம்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆளுநரின் அதிகாரங்கள்...
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆளுநரின் அதிகாரங்கள்...

ஹைதராபாத்: பஞ்சாப் மாநில அரசு அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் 2023 நவம்பர் 10ஆம் தேதி வெளியிட்ட தீர்ப்பில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்து இருக்க முடியாது. அதை மீண்டும் சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு ஆளுநர் சட்டப்பேரவைக்கு மசோதாக்களைத் திருப்பி அனுப்பும் போது ஆலோசனை வழங்கலாம். ஆனால், அதை ஏற்றுக் கொள்வதும், அதனை மறுக்கும் அதிகாரம் சட்டப்பேரவைக்கே உள்ளது. மேலும், சட்டப்பேரவையில் அந்த மசோதா திருத்தங்கள் செய்தோ அல்லது திருத்தங்கள் செய்யாமல் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதனை ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். இதனால், ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆளுநரின் அதிகாரம் சட்டப்பேரவையைக் கட்டுப்படுத்தாது என்பது தெரியவருகிறது.

ஆளுநர் மசோதாக்களை நிராகரிக்கும் அதிகாரம் இல்லை. அதனைத் திருப்பி சட்டப்பேரவைக்கு அனுப்பலாம். ஆனால், மீண்டும் சட்டப்பேரவையில் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் அதை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத்தின் தலைவர் என்பதால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த மசோதாக்களை நிறைவேற்றாமல் நிலுவையில் வைத்து இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் இது போன்ற பிரச்சனைகள் இல்லை. இதே போல் தமிழ்நாடு தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநில அரசுகளுக்குச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து உள்ளன. தெலங்கானா மாநிலம் தொடர்ந்த வழக்கில் 2023 மார்ச் 24ஆம் தேதி ஆளுநர் மசோதாக்களை விரைவாகப் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆளுநருக்குக் காலக் கெடுவை நீதிமன்றம் வழங்கவில்லை ஆனால் விரைவாக என்ற வார்த்தை நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் ஆளுநருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கேரள ஆளுநர் அலுவலகம் படிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் பஞ்சாப் வழக்கின் தீர்ப்பைப் படித்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் முடிவுகளை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் நிலுவையில் வைத்து சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டால் அதனை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை எனத் தமிழ்நாடு அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றக்கொண்டுள்ளது.

ஆளுநர்கள் சட்டம் இயற்றும் அதிகாரம் மிகவும் குறைவு சட்டப்பேரவையிலுள்ள அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்துள்ளது. 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் 7 நீதிபதிகள் மற்றும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில் ஆளுநர் அமைச்சர்களின் குழு ஆலோசனையின்படி மட்டுமே செயல்பட முடியும். சுதந்திரமான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை மேலும் நிர்வாக அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் அதிகாரம் இந்திய அரசியல் அமைப்பு பிரிவு 163 (1)ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் அதிகாரத்தை விட ஆளுநர் அதிகாரம் மேலானது கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைப்பது மற்றும் திருப்பி அனுப்புவது ஆளுநரின் அதிகாரத்தை மீறியதாகப் பார்க்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆளுநர் மசோதாவைத் திரும்ப அனுப்புவது அமைச்சர் குழுவின் ஆலோசனையின் படி செய்யப்பட வேண்டியது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 200ன் படி மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைப்பது அல்லது திருப்பி அனுப்புவது அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்புவதாக அறிவிக்க வேண்டும். திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீண்டும் இரண்டாவது முறை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 201ன் படி மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் போது குடியரசுத் தலைவர் மசோதாவைத் திரும்ப அனுப்பும் படி ஆளுநரிடம் தெரிவிக்கும் போது அதனை ஆளுநர் சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பலாம். திருப்பி அனுப்பப்பட்டு 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையில் அந்த மசோதாவைத் திருத்தம் செய்ய வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 163ன் படி ஆளுநர் அமைச்சர்கள் குழவின் உதவி மற்றும் ஆலோசனையின் படி செயல்பட வேண்டும். ஆனால் ஆளுநர் மசோதாக்கள் நிறைவேற்றம் குறித்து அரசியலமைப்பின் படி செயல்பட்டாலும் அல்லது செயல்படவில்லை என்றாலும் ஆளுநரின் முடிவு இறுதியானது மேலும் அவருடைய அதிகாரம் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அதிகாரங்கள் இருந்தாலும் அதற்கான எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் மட்டுமே அனுப்பப்படுகிறது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 356வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டால் மாநிலத்தின் நிர்வாக மற்றும் சட்டமன்ற விவரங்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் தகவல்களைப் பெறும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. மேலும் பெரும்பான்மையுடன் உள்ள கட்சிக்கு ஆட்சியை அமைக்கக் கோரும் அதிகாரமும் உண்டு.

நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்துவது அப்போது ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் ஆட்சியைக் கலைப்பது மற்றும் அமைச்சர் குழு ராஜினாமா செய்யும் போது மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது ஆகிய பல்வேறு அதிகாரங்கள் ஆளுநருக்கு உண்டு. இதன் மூலம் ஆளுநரின் அதிகாரம் ஒன்றுக்கு மேற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனைத்தும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் போது நீதிமன்றம் மற்றும் சட்டப்பிரிவு தெரிவித்துள்ளது படி "முடிந்தவரை விரைவில்" என்ற கருத்தை நோக்கிய உள்ளது. 2010ஆம் ஆண்டு புஞ்சி கமிஷன் 6 மாத காலத்திற்குள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 200ன் படி "முடிந்தவரை விரைவில்" என்ற சொல் அடுத்த இரண்டு சட்டப்பேரவை கூட்டம் அல்லது ஆறு மாதம் இதில் எது அதிகமாக இருந்தாலும் அதன் படி ஆளுநரின் முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டும். குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படாத மசோதாக்கள் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.