ETV Bharat / bharat

ஓய்வுபெற்றார் என்.வி. ரமணா... பின்னணியும் வரலாற்றுத்தீர்ப்புகளும்

author img

By

Published : Aug 26, 2022, 5:25 PM IST

டெல்லி உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ரமணா இன்று (ஆகஸ்ட் 26) ஓய்வு பெற்றார். இந்திய நீதித்துறையின் மிக உயர்ந்த பதவிக்கு வந்த இரண்டாவது தெலுங்கரான ரமணா, அவரது பதவிக்காலத்தில் சிறப்பாகப் பணியாற்றினார்.

Etv Bharatஓய்வுபெற்றார் என்வி ரமணா - பின்னணியும் வரலாற்றுத்தீர்ப்புகளும்
Etv Bharatஓய்வுபெற்றார் என்வி ரமணா - பின்னணியும் வரலாற்றுத்தீர்ப்புகளும்

டெல்லி: இந்தியாவின் 48ஆவது தலைமை நீதிபதியாக பதவி வகித்த என்.வி.ரமணா அவரது 16 மாத கால பதவியில் இருந்து இன்று ஓய்வுபெற்றுள்ளார். அவரது அதிகாரத்தின்கீழ் நிறைவேற்றப்பட்ட பல முக்கிய தீர்ப்புகள் மூலம், ரமணா நீதித்துறை அமைப்பின் முக்கியமான வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அவரது வார்த்தைகளின் தெளிவு, பொது நலனுக்கான முன்னுரிமை ஆகியவை, கடந்த 16 மாதங்களில் அவர் வழங்கிய பெரிய மற்றும் சிறிய தீர்ப்புகள் அனைத்திலும் அவரை தனித்து நிற்க வைத்தன.

இந்தியாவின் மிக உயர்பதவிகளில் ஒன்றான உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவிற்கு பின்னர் பதவியேற்றார். இந்நிலையில் என்.வி. ரமணா ஓய்வுபெறுவதையடுத்து இன்று (ஆகஸ்ட் 26) உச்ச நீதிமன்ற வழக்கின் விசாரணை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

அதிக பெண் நீதிபதிகள் நியமனம்: ரமணா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம் (நான்கு நீதிபதிகள் கொண்ட குழு) 11 உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், 250-க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் நியமித்துள்ளது.

அதிக பெண் நீதிபதிகள் நியமனம்
அதிக பெண் நீதிபதிகளை நியமனம் செய்த நீதிபதி என்.வி.ரமணா

இந்நிலையில் ரமணா தனது பதவிக்காலத்தில் அவராகவே மொத்தம் 15 உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார். அதே நேரத்தில் பெண் நீதிபதிகளையும் அதிக அளவில் தேர்ந்தெடுத்தார். இந்தப்பெண்களில் ஒருவர் 2027ஆம் ஆண்டில் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவதற்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார்.

தலைமை நீதிபதி ரமணாவின் பல சாதனைகளில் முக்கியாமனது பொது விழிப்புணர்வுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். பொது மக்களிடமிருந்து பெற்ற கடிதங்கள் ஒவ்வொன்றிற்கும் நேரடியாகப் பதில் அளித்து பொது மக்களுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையிலான இடைவெளியைக்குறைக்க முயன்றார். நீதிபதிகளின் பதவிப் பிரமாணத்தை நேரலையாக ஒளிபரப்பும் முறையை அறிமுகப்படுத்தினார். நீதிமன்றங்களில் தினசரி விசாரணைகளை பத்திரிகையாளர்களுக்குக் கிடைக்கும் வகையில் சிறப்புச்செயலியை அமைத்தார்.

ரமணாவின் பின்னணி: நீதிபதி என்.வி. ரமணா ஆகஸ்ட் 27, 1957அன்று ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பொன்னாவரம் கிராமத்தில் நுதலபதி கணபதி ராவ் மற்றும் சரோஜினி தேவிக்கு மகனாகப் பிறந்தார். எளிமையான பின்னணியில் பிறந்து வளர்ந்த ரமணா, தனது கிராமத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளியில் படித்தார்.

ரமணாவின் பின்னனி
ரமணாவின் பின்னணி

பின்னர் அவர் அறிவியலில் இளங்கலைப்பட்டம் பெற்ற பிறகு நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது ரமணா மாணவராக இருந்தார். அந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ரமணா சமூக அரசியல் களத்தில் உள்ள பிரச்னைகளை முதலில் வெளிப்படையாகப்பேசினார். அவசர பிரகடன நிலையில் கைது செய்யப்பட்ட நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தனது நண்பர்களை அவர் தீவிரமாக ஆதரித்தார். சில காலம் ‘ஈநாடு’ நாளிதழில் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.

நீதிபதி என்.வி. ரமணா பிப்ரவரி 1983இல் பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். விஜயவாடாவில் பிரபல வழக்கறிஞரான கந்தமனேனி ரவீந்தர் ராவிடம் சில மாதங்கள் ஜூனியராகப் பணியாற்றிவிட்டு ஹைதராபாத் வந்தார். அங்கு மூத்த வழக்கறிஞர் எராசு அய்யாபு ரெட்டியின்கீழ் பத்து ஆண்டுகள் ஜூனியராகப் பணியாற்றினார். சொந்தமாக பயிற்சி செய்துவிட்டு, அய்யாபு ரெட்டி அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வந்தார். அய்யாபுரெட்டி அரசியலில் பிஸியாக இருந்ததால், வழக்குகளை ரமணா மேற்பார்வையிட்டார்.

ஏப்ரல் 1998இல் ஆந்திரப் பிரதேசத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகப் பொறுப்பேற்ற அவர், ஜூன் 27, 2008 அன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மார்ச் 13 முதல் மே 20, 2013 வரை, கூட்டு உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 2அன்று டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 17அன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ரமணாவின் பதவிக்காலத்தின் முக்கிய தீர்ப்புகள்: தலைமை நீதிபதி ரமணா வழங்கிய நூற்றுக்கணக்கான தீர்ப்புகளில், பெகாசஸ் விவகாரம் நேற்று ஒத்திவைக்கப்பட்டதால் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாமானியர்களுக்கு எதிராக அரசு துரோக வழக்குகள் போடுவதைத் தடுக்கும் வகையில், கடந்த மே மாதம் ரமணாவின் பதவிக் காலத்தில்தான் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றங்களால் ஜாமீன் உத்தரவு பிறப்பிக்கப்படாததால் கைதிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க, 'ஃபாஸ்டர்' எனப்படும் பாதுகாப்பான மின்னணு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது.

கடுமையான UAPA சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளருக்கு வாழ்வதற்கான அடிப்படை உரிமையைக் காரணம் காட்டி டெல்லியில் மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்று நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.

மேலும், கரோனா தொற்றுநோயின்போது, ​​நீதிபதி ரமணா தானாக ஒரு வழக்கை எடுத்து, ஆக்ஸிஜன் விநியோகம் மற்றும் தடுப்பூசி விலைகள் விஷயத்தில் தலையிட்டார். இதனால், அரசு தனது கொள்கையை மாற்றி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசியை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போது, ​​கேரளாவைச் சேர்ந்த லிட்வினா ஜோசப் என்ற 5ஆம் வகுப்பு சிறுமி, நீதிமன்றத்தின் தலையீட்டை பாராட்டி, தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முதல்முறையாக நேரடி ஒளிபரப்பாகும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.