ETV Bharat / bharat

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனைகளுக்கு விசா வழங்க சீனா மறுப்பு! கிரண் ரிஜிஜூ கண்டனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 10:57 AM IST

ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அருணாசல பிரதேச வீராங்கனைகளுக்கு விசா வழங்க மறுத்த சீனாவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Kiren Rijiju
Kiren Rijiju

டெல்லி : சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த 3 வீராங்கனைகள் கலந்து கொள்ள விசா வழங்க சீனா அனுமதி மறுத்ததற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் சனிக்கிழமை (செப். 23) தொடங்குகிறது. அதில் வுஷூ எனும் தற்காப்பு கலை சார்ந்த விளையாட்டில் பங்கேற்க 8 போ் கொண்ட இந்திய குழு இன்று (செப். 23) இரவு சீனா செல்ல இருந்தது. இந்நிலையில், அதில் அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த 3 வீராங்கனைகளுக்கு விசா வழங்க சீனா அனுமதி மறுத்து உள்ளது.

சீனாவின் எல்லையை ஒட்டி அருணாசல பிரதேச மாநிலம் உள்ள நிலையில், அதற்கு நீண்ட நாட்களாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அருணாசல பிரதேசத்தை தன்னோடு இணைத்து அவ்வப்போது சீன அரசு புதிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அருணாசல பிரதேச வீராங்கனைகளை இந்தியக் கொடியின் கீழ் விளையாட அனுமதி மறுத்து சீனா விசா வழங்காமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறுகையில், "ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த இந்திய வீராங்கனைகளுக்கு திட்டமிட்டே சீன அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனா்.

வாழ்விடம் அல்லது இனத்தைச் சாா்ந்து தங்கள் நாட்டு குடிமக்களை வேறுபடுத்திப் பாா்ப்பதை இந்தியா உறுதியாக நிராகரிக்கிறது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கிறது. எப்போதும் அப்படியே இருக்கும். நாட்டின் நலனை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிமை இந்தியாவுக்கு உள்ளது.

இதையடுத்து ஆசிய போட்டிகள் தொடக்க விழாவை புறக்கணிப்பதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்து உள்ளார். ஆசிய போட்டிகள் தொடக்க விழாவில் அவர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அருணாசல பிரதேச வீராங்கனைகளுக்கு அனுமதி மறுத்ததை அடுத்து விழாவை புறக்கணிப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், அருணாசல பிரதேச வீராங்கனைகளுக்கு விசா மறுக்கப்பட்டதற்கு மத்திய புவி அறிவியல் துறை கிரண் ரிஜிஜூ சீனாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "ஹாங்சோ நாகரில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள இருந்த அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த வுஷூ விளையாட்டு வீராங்கனைகளுக்கு விசா மறுத்த சீனாவின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இது விளையாட்டு உணர்வு மற்றும் ஆசிய விளையாட்டுகளை நடத்தும் விதிகள் இரண்டையும் மீறியது. இது உறுப்பு நாடுகளின் போட்டியாளர்களுக்கு எதிரான பாகுபாட்டை வெளிப்படையாக உருவகப்படுத்துகிறது. அருணாச்சல பிரதேசம் சர்ச்சைக்குரிய பிரதேசம் அல்ல, அது இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி.

  • I strongly condemn this act by China to deny visas to our Wushu Athletes from Arunachal Pradesh who were to participate in the 19th Asian Games in Hangzhou. This violates both the spirit of Sports & also the Rules governing the conduct of Asian Games, which explicitly prohibits…

    — Kiren Rijiju (@KirenRijiju) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அருணாச்சல பிரதேசத்தின் ஒட்டுமொத்த மக்களும், தங்களது நிலம் மற்றும் உரிமைகளை சீனா சட்ட விரோதமாக உரிமை கோருவதை உறுதியுடன் எதிர்க்கின்றனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சீனாவின் சட்டவிரோத நடவடிக்கையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த பதிவில் அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : Speaking4India : சிஏஜி அறிக்கையில் பாஜக மவுனம் ஏன்? ஸ்பீக்கிங் பார் இந்தியா குரல்வழிப் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.