காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டு 135 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரசார் நிறுவன நாளை கொண்டாடிவருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.
விழாவில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி, நேரு, இந்திராகாந்தி உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் சஞ்சய்தத், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவில், பேசிய நாராயணசாமி, "மக்கள் நலனுக்காக செயல்படும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. அதனால் தான் புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியின் திறமைக்கு மத்திய அரசு மூலம் விருதுகள் கிடைத்துள்ளது. ஆனால் மாநில வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் ஆளுநர் கிரண்பேடி அலுவலர்களை மிரட்டி வருவதால் அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் நிறுவன தினத்தில் ராகுல் தலைமையில் நாடு தழுவிய பேரணி