ETV Bharat / bharat

கரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து - வெளியிடும் பதஞ்சலி நிறுவனம்!

author img

By

Published : Jun 23, 2020, 12:38 PM IST

Updated : Jun 23, 2020, 2:58 PM IST

டெல்லி : அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கோவிட்-19 தொற்றுக்கான ஆயுர்வேத மருந்தை இன்று வெளியிடவுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

Patanjali
Patanjali

கோவிட்-19 தொற்றின் தாக்கம் உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா, பிரேசில், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்றின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. இந்தத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், இதுவரை இந்தத் தொற்றுக்கு யாரும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், கோவிட்-19 தொற்றுக்கு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தை இன்று வெளியிடவுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், "அறிவியல்பூர்வமான ஆதரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தொற்றுக்கான முதல் ஆயுர்வேத மருந்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில், பதஞ்சலி உருவாக்கியுள்ள மருந்தைக் கொண்டு கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை ஐந்து முதல் 14 நாள்களுக்குள் குணப்படுத்திவிட முடியும் என்று பால்கிருஷ்ணா கூறியிருந்தார்.

Patanjali to launch ayurvedic medicine
உலகிலேயே முதன்முறையாக கரோனாவுக்கு மருந்தை வெளியிடும் பதஞ்சலி

இந்நிலையில் தற்போது இது குறித்து பேசியுள்ள அவர், "கோவிட்-19 தொற்று பரவ ஆரம்பித்ததும் இது குறித்து ஆய்வு செய்ய ஒரு வல்லுநர் குழுவை அமைத்தோம். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நாங்கள் உருவாக்கிய மருந்தை அளித்தோம். அதில் எங்களுக்கு 100 விழுக்காடு சாதகமான முடிவே கிடைத்துள்ளது.

எங்கள் மருந்தை எடுத்துக் கொண்ட கரோனா நோயாளிகள் ஐந்து முதல் 14 நாள்களில் கரோனாவிலிருந்து குணமடைகிறார்கள். இந்த ஆய்வு முடிவுகளை விரைவில் வெளியிடுவோம்" என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மருந்தை பதஞ்லி நிறுவனமும் ஜெய்ப்பூரிலுள்ள தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய தேசியவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீன கட்டுரை!

Last Updated : Jun 23, 2020, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.