ETV Bharat / bharat

சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி.. ஆந்திராவில் பந்த்.. கலவரத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 9:09 PM IST

Chandrababu Naidu arrest: சந்திரபாபு நாயுடு மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல இடங்களில் கற்களை வீசினர். போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலவரத்தில் ஈடுபட்ட பல போராட்டக்காரர்களை கைது செய்தனர்.

andhra pradesh tdp hold state wide bandh protesting chandrababu naidu arrest
சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி

விஜயவாடா: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் (Telugu Desam Party) தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சியினர் இன்று (செப்.11) மாநிலம் தழுவிய பந்த் நடத்தினர்.

கைதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் இன்று காலை முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைகளில் மறியலில் ஈடுபட்டனர். சித்தூர் மாவட்டத்தில் இன்று காலை டிப்போவில் இருந்து அரசு போக்குவரத்து கழக (RTC) பேருந்து புறப்பட்டபோது அவர்கள் பேருந்து மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. மேலும், போராட்டக்காரர்கள் டயர்களுக்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக போலீசார் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளனர்.

பகல் நேரத்தில், பல பகுதிகளில் சாலைகளில் பேருந்துகள் முறையாக இயங்கவில்லை. அதே நேரத்தில் மார்கெட் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. போலீசார் முக்கிய தலைவர்கள் சிலரை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சித் தொண்டர்கள் பலரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பல கோடி ரூபாய் மதிப்பிலான திறன் மேம்பாட்டுக் கழக ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சனிக்கிழமை (செப்.9) இரவு சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் (Anti-Corruption Bureau) ஆஜர்படுத்தப்பட்டார். செப்டம்பர் 23-ஆம் தேதி வரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், திங்கள்கிழமை (செப்.11) விஜயவாடாவில் இருந்து கிழக்கு கோதாவரியில் உள்ள ராஜமகேந்திராவரம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

சந்திரபாபு நாயுடு ராஜமகேந்திராவரம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட போது அவரது மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் சிறை வாசல் வரை உடன் சென்றார். இசட் பிளஸ் பாதுகாப்பு கொண்ட சந்திரபாபு நாயுடுவிற்கு சிறையில் தங்குவத்ற்கு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் அவருக்கு வீட்டில் சமைத்த உணவு மற்றும் மருந்து வசதிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க: திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7 பெண்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல்; ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.