புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நான்கு வயது மகளை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த அவரது தாய் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கொய்தா காங் பகுதியில் நேற்று (மார்ச் 27) நடந்துள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், புனேவின் ஹடப்சர் பகுதியில் உள்ள சித்திவிநாயக் துர்வான்கூர் சொசைட்டி என்னும் குடியிருப்பில் கல்பி என்னும் பெண் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்த இவருக்கு வைஷ்ணவி மகேஷ் வதேர் என்னும் நான்கு வயது மகள் இருந்தார்.
இருவரும் 23 நாட்களுக்கு முன்பே சித்திவிநாயக் துர்வான்கூர் சொசைட்டியில் வாடகைக்கு குடி பெயர்ந்துள்ளனர். இந்த வீட்டையும் மார்ச் 27ஆம் தேதி காலி செய்யப் போவதாக வீட்டின் உரிமையாளரிடம் கல்பி கடந்த வாரம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் வீட்டின் உரிமையாளர் நேற்று அங்கு சென்றிருந்தார்.
அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. இதனால் உரிமையாளர் கதவை தட்டி கல்பியை அழைத்துள்ளார். ஆனால், அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உரிமையாளர், அக்கம் பக்கத்தினர் உதவி உடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது 4 வயது பெண் குழந்தை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்து விரைந்து குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அதோடு அந்த வீட்டில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்தோம். இதையடுத்து குழந்தையின் தாயாரிடம் விசாரித்ததில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதன் பின் அவரை கைது செய்து சிறையில் அடைத்தோம். இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: சென்னையில் பெண்ணை கொடூரமாகக் கொன்று தீ வைத்த நபர் கைது