ETV Bharat / bharat

கேரளாவும் படகு விபத்துகளும் - 1924 முதல் 2023 வரை - ஒரு பார்வை!

author img

By

Published : May 8, 2023, 5:58 PM IST

கேரள மாநிலத்தின், மலப்புரத்தில் படகு விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நூற்றாண்டு கடந்து கேரளாவில் இதுவரை ஏற்பட்ட மோசமான படகு விபத்துகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

Kerala Boat Accident
Kerala Boat Accident

திருவனந்தபுரம் : கேரள மாநிலம், மலப்புரத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி உள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டு உள்ளது. தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த படகு விபத்து ஒன்றும் கேரளாவுக்கு புதிதல்ல. நூற்றாண்டு கடந்து கேரளாவில் படகு விபத்துகள் நடந்தும், நடைபெற்றும் வருகின்றன. பேரிடர்களில் இருந்து பாடம் கற்காததும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தாததுமே இதுபோன்ற படகு விபத்துகளுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

  1. இதற்கு முன் கடந்த 1924ஆம் ஆண்டு கொல்லத்தில் இருந்து கோட்டயம் நோக்கி சென்று கொண்டு இருந்த சுற்றுலாப் படகு, பலானா பகுதியில் திடீரென கவிழ்ந்து நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். புகழ்பெற்ற கேரளக் கவிஞர் மகாகவி குமரன் ஆசான் இந்த படகு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
  2. அதேபோல், கடந்த 1980ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி கொச்சி அடுத்த கண்ணமலி பகுதியில் நடந்த படகு விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். உள்ளூர் தேவாலயத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளச் சென்ற சுற்றுலாப் பயணிகள், இந்த படகு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  3. 1983ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள தேவாலயத்தில் நடந்த விழாவில் கலந்துவிட்டு திரும்பியபோது ஏற்பட்ட படகு விபத்தில், 18 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
  4. கடந்த 2002ஆம் ஆண்டு கேரள நீர் போக்குவரத்துத் துறையின் A53 படகு வெம்பநாடு ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். வரம்புக்கு மீறி அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதாலே இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் கேரளாவில் பி.எஸ்சி தேர்வு எழுத சென்ற கோட்டயத்தைச் சேர்ந்த மாணவர்கள், 9 மாத குழந்தை, 15 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  5. கடந்த 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி கொல்லம் கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில், அந்தப் படகில் பணியாற்றிய 7 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
  6. 2005ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி வெம்பநாடு ஏரியில் நடந்த படகு விபத்தில், அரபு நாட்டு சுற்றுலாப் பயணி உள்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
  7. பிப்ரவரி 20ஆம் தேதி 2007ஆம் ஆண்டு, எர்ணாகுளம் மாவட்டம், பெரியார் ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 14 குழந்தைகள், 3 ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் படகில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே சென்றதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வெறும் 6 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய படகில் 61 பேரை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக அதிர்ச்சிகரத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
  8. செப்டம்பர் 30ஆம் தேதி 2009ஆம் ஆண்டு, முல்லைப் பெரியாறு நீர்த் தேக்கத்தில் ஏற்பட்ட படகு விபத்தில், 45 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான இரண்டடுக்கு படகில் 75 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய சூழலில், 80 பயணிகள் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
  9. 2011ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குதியத்தோடு பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
  10. 2013ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னக்காடு பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
  11. அதே 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி அதே ஆலப்புழா மாவட்டம், புன்னக்காடு பகுதியில் நிகழ்ந்த மற்றொரு படகு விபத்தில் 2 பேர் இறந்தனர்.
  12. தற்போது 2023ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கேரளாவின் மலப்புரத்தில் நடந்த கோர படகு விபத்தில் பெண்கள் உள்பட 22 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க : "ஆன்மிகத்தோடு கூடிய தமிழே.. தமிழகத்திற்கு வளர்ச்சியைத் தரும்" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.