ETV Bharat / bharat

ஓடும் ரயிலின் கழிவறையில் சிறுமியின் கால் சிக்கியதால் பரபரப்பு!

author img

By

Published : Aug 18, 2023, 12:41 PM IST

Avadh Express: ஓடும் ரயிலில் கழிவறையின் துளையில் 4 வயது சிறுமியின் கால் சிக்கியதை அடுத்து, பல்வேறு முயற்சிக்கு பிறகு சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

ஆக்ரா: பிகாரில் உள்ள சீதாமர்ஹியில் வசிக்கும் முகமது அலி என்பவர், தனது மனைவி மற்றும் 4 வயது மகளுடன் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆக்ரா கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து அவத் எக்ஸ்பிரசில் ஏசி கோச்சில் (பி6) பயணம் செய்துள்ளார். அப்போது ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் சிறுமியை அவரது தாய் கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அந்த பெண் குழந்தையை கழிவறையில் உட்கார வைத்திருந்த நேரத்தில், அவரது செல்போனில் அழைப்பு வந்துள்ளது. உடனே செல்போன் அழைப்பை எடுத்து பேசியுள்ளார். இதற்கிடையில், கழிவறையில் அமர்ந்திருந்த சிறுமி ரயிலின் அசைவால் திடீரென தவறி, கழிவறையின் துளையில் சிறுமியின் கால் சிக்கி உள்ளது.

இதை அடுத்து, சிறுமியின் தாய் கழிப்பறையின் துளையில் சிக்கியிருந்த தனது மகளின் காலை வெளியே எடுக்க முயன்றுள்ளார். ஆனால், சிறுமியின் காலை வெளியே எடுக்க இயலாத நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் சக பயணிகள் அனைவரும் தாய் மற்றும் மகளின் கூச்சல் சத்தம் கேட்டு கழிவறைக்கு வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அனைவரும் கழிப்பறையின் துளையில் சிக்கியிருந்த சிறுமியின் காலை வெளியே எடுக்க முயன்றுள்ளனர். வலியால் சிறுமி அழுது கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த சிலர் பயணிகள் ரயில்வே உதவி எண்ணை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறி உதவி கேட்டுள்ளனர்.

இதனிடையே அவத் எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கனவே 20 கிலோ மீட்டர் பயணித்திருந்தது. அதனால் ஃபதேபூர் சிக்ரி ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும், அங்கு ஜிஆர்பி (GRP - Government Railway Police), ஆர்பிஎஃப் (RPF - Railway Protection Force) மற்றும் ரயில்வே அதிகாரிகள் அனைவரும் சிறுமி இருந்த பெட்டிக்கு வந்தனர்.

இதனை அடுத்து, சிறுமியின் காலை விடுவிக்க பல்வேறு முயற்சிகள் செய்தும் முடியாத நிலையில், கழிவறை இருக்கைக்கு அடியில் உள்ள பயோ டாய்லெட்டின் கழிவு சேகரிப்பு பெட்டியை திறக்க முடிவு செய்து, ரயில்வேயின் தொழில்நுட்பக் குழுவின் உதவியோடு சுமார் அரை மணிநேர முயற்சிக்குப் பிறகு சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் அவத் எக்ஸ்பிரஸ் ஃபதேபூர் சிக்ரியில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஞானவாபி வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண இந்து தரப்பு தயாராக இல்லை - வழக்கறிஞர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.