ETV Bharat / state

புகைப்பழக்கத்திற்கும் ஆண்குறி புற்று நோய்க்கும் தொடர்பு உள்ளதா? மருத்துவர் கூறுவது என்ன? - Penile Cancer

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 7:29 PM IST

Updated : May 15, 2024, 6:06 PM IST

Penile Cancer: ஆண்குறி புற்றுநோய் எவ்வாறு வருகிறது, அப்படி வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும், ஆண்குறியை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பது பற்றி சிறுநீரக புற்றுநோய் சிறப்பு மருத்துவர் என்.ராகவன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் காணலாம்.

கெட்டி இமேஜ்ஸ், சிறுநீரக புற்றுநோய் சிறப்பு மருத்துவர் என்.ராகவன் புகைப்படம்
கெட்டி இமேஜ்ஸ், சிறுநீரக புற்றுநோய் சிறப்பு மருத்துவர் என்.ராகவன் புகைப்படம் (credit to ETV Bharat Tamil Nadu)

சிறுநீரக சிறப்பு மருத்துவர் என்.ராகவன் பேட்டி (credit to ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஆண்களின் ஆண்குறியில் ஏற்படும் புற்று நோயைக் கண்டுபிடிப்பதற்கு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், பல பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டாலும் புற்றுநோய் வரும் என அப்பல்லோ புற்றுநோய் சென்டர் சிறுநீரக புற்றுநோய் சிறப்பு மருத்துவர் என்.ராகவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறப்பு மருத்துவர் என்.ராகவன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "ஆண் உறுப்பில் வரக்கூடிய புற்றுநோய் உலகளவில் அதிகமாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆணுறுப்புகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதும், சுய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் புற்றுநோய் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைகிறது.

ஆணுறுப்பில் கட்டி வந்தால் மருத்துவரை அணுகுவதில் வெட்கம் இருக்கிறது. பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி இருந்தால் அவர்கள் அதுகுறித்து நெருங்கிய உறவினர்களிடம் கூறுவார்கள். ஆனால், ஆண்கள் அது போன்று பேசுவது கிடையாது. ஆண்கள் ஆண்குறி புற்றுநோய் முற்றிய பின்னர் கடைசி நேரத்தில் தான் வருகின்றனர்.

புற்றுநோய் பாதிப்பு ஒவ்வொரு நாட்டிலும் ஒரு அளவில் இருக்கும். அமெரிக்காவில் புரோஸ்டேட் சுரபி புற்றுநோய் அதிகமாகவும், இந்தியாவில் குறைவாகவும் இருக்கிறது. தொண்டை புற்றுநோய் இந்தியாவில் அதிகமாகவும், அமெரிக்காவில் குறைவாகவும் இருக்கிறது. இதே போன்று இந்தியாவில் ஆண்குறி புற்றுநோய் அதிகமாக உள்ளது என்றார்.

இந்தியாவில் புகைப்பிடித்தல், புகையிலையை உண்ணுதல் போன்ற பிரச்னை இருக்கிறது. இதனால் வாய், தொண்டை, நுரையீரல், ஆண்குறியில் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும். இது நூறாயிரம் பேரில் 10 பேருக்கு வருகிறது. ஆண்குறி புற்றுநோய் அதிகரித்து இருக்கிறது எனக் கூற மாட்டேன். ஆனால் முன்பு இது போன்று இருந்தால் ஒன்றும் இல்லை எனக் கருதி விட்டு விடுவார்கள். ஆனால் தற்பொழுது இது குறித்த விழிப்புணர்வு அதிகமாகி உள்ளது. இதனால் முன்கூட்டியே அதாவது முதல், 2ம் நிலையிலேயே வருகின்றனர்.

புகைப்பிடித்தால் புற்றுநோய் வருமா?: தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் புகைப்பிடித்தல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. புகைப்பிடித்தல் அதிகரிக்கும் போது புற்றுநோய் பாதிப்பும் அதிகரிக்கும். ஆணுறுப்பு புற்றுநோயை 2 ஆகப் பிரிக்கலாம். வைரஸ் தொற்றாலும் ஆணுறுப்பு புற்றுநோய் ஏற்படும். ஒருவர் ஒரு பெண்ணைத் தவிர நிறையப் பெண்களிடம் உறவு முறை இருந்தால், எச்பிவி வைரஸ் தொற்று ஏற்படும். அதேபோல், பெண்களுக்கும் சர்விகல் கேன்சர் (கர்ப்பப்பை வாய்) வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த கேன்சர் ஆண் பெண் உடலுறவு கொள்ளும்போது பரவும்.

மேலும், இது புகைப்பிடித்தல் மூலம் வரும். புகைப்பிடித்தவுடன் வரும் என்பது கிடையாது. 10 ஆண்டுகள் கழித்து புற்றுநோய் காண்பிக்கும். போதைப் பொருள்களால் ஆண்குறி புற்றுநோய் வராது. ஆனால் போதைப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள் கூடவே தகாத உறவுமுறைகளில் ஈடுபட்டும், புகைப்பிடிப்பதாலும் வரும்.

ஆண்குறியில் புண் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?: ஆண்குறியில் புண் இருப்பதை கண்டுபிடித்தால் அவர்கள் ஆரம்ப நிலையில் வந்தால் குணப்படுத்த முடியும். ஆண்குறியில் கட்டி தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். அவர்களைப் பார்த்து பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும். அதனை வளரவிட்டு, அருகில் நெறி கட்டும் நிலைக்குச் சென்றால் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். மேலும், உடலின் மற்ற பகுதிகளுக்குச் புற்று பரவினால் குணப்படுத்த முடியாது. அவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்த மட்டுமே முடியும். குணப்படுத்த முடியாது. ஆண் குறியில் எஸ்சிசி புற்றுநோய் தான் அதிகளவில் வருகிறது.

ஆண்குறியை எவ்வாறு சுத்தம் செய்வது?: பெண்கள் மார்பகத்தை 3 மாதத்திற்கு ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனக் கூறுவது போல், ஆண்கள் குளிக்கும் போது ஆண்குறியில் உள்ள முன்தோலை பின்னோக்கி இழுத்துப் பார்த்து, சிவப்பாக ஏதாவது கட்டி தெரிந்தால் மருத்துவரை அணுக வேண்டும். விரைப்பையையும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

ஆண்குறி மற்றும் ஆண் விரைப்பை குளிக்கும் போது தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எளிதான வழிமுறையாகும். மார்பக புற்றுநோயை விட ஆண்குறி உறுப்பில் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் குறைவாகவே இருக்கிறது என்பதால் அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனாலும், ஆண்களும் ஆண்குறி மற்றும் விரைப்பையை 3 மாதத்திற்கு ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்ளலாம்.

ஆண்குறி புற்றுநோய் கண்டு பயப்பட வேண்டாம்: ஆண்குறி புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிறுநீரகம் வரக்கூடிய பாதையை அடைத்து விட்டால் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும். அது முற்றிய நிலையில் வரும். ஆனால் அடைப்பு குறைவாக இருந்தாலும் சிறுநீரக தொற்று வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. புற்றுநோய் என்பதைக் கண்டு பயப்படாமல் அது மருத்துவப் பிரச்னை என்பதை உணர்ந்து சிசிக்சை பெற்றால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற உணர்வு வர வேண்டும். நோய் வந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

பொதுமக்களிடம் நேர்மறை எண்ணங்கள் குறைந்துவிட்டது. தற்பொழுது வந்துள்ள இணையதளம் போன்றவற்றில் படித்து அவர்களாக முடிவு செய்கின்றனர். அதனைத் தவிர்த்து மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெற வேண்டும். எல்லா புற்றுநோய்க்கும் கீமோதெரபி சிகிச்சை கிடையாது.

ஒவ்வொரு புற்றுநோய்க்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. சில புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை தான் தீர்வாகும். சில புற்றுநோய்க்குக் கதிர்வீச்சு முறையும், ரத்த புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சையும் அளிக்கப்படும். ஆண்குறி புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சைதான் முதல் சிகிச்சையாகும்.

ஆண்குறியில் உள்ள கட்டியை மட்டும் எடுத்துவிட்டு, ஆண்குறியைப் பாதுகாக்கலாம். அவர்கள் இயல்பாக வாழ்வார்கள். ஆண்குறி புற்றுநோய் பரவினால் மட்டுமே கீமோதெரபி சிகிச்சை வரும். ஆரம்ப நிலையில் வந்தால் நன்றாகக் குணம் அடைவார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Sex-க்கு அடிமையா நீங்கள்: உங்களை நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள்.!

Last Updated :May 15, 2024, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.