சென்னை: இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மே. 17ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பினால், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மே 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிக்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். எனவே, தேர்வர்கள் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் இதில் எது வேண்டும் என்பதை தெளிவான முடிவு செய்து கொண்டு, அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கேட்டு, பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போது, அளிக்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள், தங்களது விடைத்தாளின் நகலை https://dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.
11ஆம் வகுப்பு துணைத்தேர்வு: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2024 மார்ச் பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத பள்ளி மாணவர்கள், அந்தப் பாடங்களை எழுத பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள், அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலமாகவும் மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் கூடுதல் கட்டணத்தையும் செலுத்தி விண்ணப்பம் செய்யலாம். மேலும், விரிவான தகவல்களையும், தேர்வு கால அட்டவணையையும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்..! - Yellow Fever Vaccine