ETV Bharat / state

"பிடிபட்ட 4 கோடி என்னுடைய பணம்" - ஒப்புக்கொண்ட நடிகர் மன்சூர் அலிகான்! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 7:21 PM IST

Vellore Candidate Mansoor Ali Khan: பாஜக, அதிமுகவை விரட்ட வேண்டும் என்றும், தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டியும் வேலூர் வேட்பாளர் மன்சூர் அலிகான் பூசணிக்காய் உடைத்தார்.

வேலூர்
Vellore

"பிடிபட்ட 4 கோடி என்னுடைய பணம்" - ஒப்புக்கொண்ட நடிகர் மன்சூர் அலிகான்!

வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் உழவர் சந்தை வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து இன்று அமாவாசை என்பதால் தீய சக்தியான பாஜக மற்றும் அதற்குத் துணை போகும் அதிமுகவைத் தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும் என்றும் நான் இந்த தொகுதியில் வெற்றி பெறுவேன் என கூறி பூசணிக்காயை உடைத்தார்.

பின்னர் வேட்பாளர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் ராகுல் ஒதுங்கி வழி விட வேண்டும் என பிரசாந்த் கிஷோர் அட்வைஸ் கொடுத்துள்ளாரே என கேட்டதற்கு, "பிரசாந்த் கிஷோர் அவர் யார், அவர் ஒரு மாமா... டாபர் மாமா அவர் ஒரு தரகர்.

மக்களை அவர் யூகங்கள் வகித்து 600 கோடி 6000 கோடி பணத்தைப் பெற்றுக் கொண்டு குள்ளநரித்தனம் செய்து எப்படி ஜெயிப்பது என ஆலோசனை கூறுபவர். ராகுல் காந்திக்கு தகுதி இல்லை என்றால் மோடி தான் வர வேண்டுமா? ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு 34 வருடங்கள் எந்த அரசு பதவியிலும், அதிகாரத்திலும் அந்தக் குடும்பம் இல்லை. மிகப்பெரிய நடைப்பயணத்தை ராகுல் காந்தி போல் யாரும் செய்யவில்லை.

ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி தான் பிரதமராக வரவேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம். ஏன் எனது விருப்பமும் கூட. 38 இடங்களில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறேன். பிரசாந்த் கிஷோர் ஏதோ வன்மத்தில் பேசுகிறார். அது தெளிவாகத் தெரிகிறது. அவர் கூற்று ஏற்படுவது அல்ல" எனக் கூறினார்.

தொடர்ந்து, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் இருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது பற்றிய கேள்விக்கு, "பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என கூறுகிறார். ஆம் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

அது என்னுடைய பணம். எனக்குப் பல தயாரிப்பாளர்கள் பணம் தர வேண்டும். அந்த பணத்தை எல்லாம் அங்கு தான் கொடுத்து வைத்துள்ளதாகக் கூறுகின்றார்கள். அதை எனக்கு அனுப்பி வைக்கச் செல்லுங்கள்" என நக்கலாகப் பதில் அளித்தார்.

அதே போல் பாஜக ஓட்டுக்குப் பணம் கொடுப்பதில்லை என கூறுகின்றனர் என்ற கேள்விக்கு, "அது தான் செய்திகளில் வந்து விட்டதே. அங்கு கொடுக்க வைத்து, இங்கு போன் போட்டு பிடிக்க வைக்கிறார் அண்ணாமலை. அவருக்குக் காட்டிக் கொடுப்பது தான் வேலை" என தெரிவித்தார்.

நீங்கள் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட கே.வி.குப்பத்தும் பகுதியில் 7 லட்சம் பறிமுதல் செய்துள்ளார்களே என்பது குறித்துக் கேட்டதற்கு, "தேர்தல் ஆணையம் ஏதேதோ வைத்து சோதனை செய்கின்றனர். எனது வாகனத்தைச் சோதனை செய்வதில்லை. நான் 100 கோடி வைத்துக் கொண்டு சுற்றி வருகிறேன். என்னைப் பிடிக்க மாட்டேங்கிறாங்க" என காமெடியாக பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, மோடி வேலூருக்கு வருவதற்கு திமுக பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துத் தான் இதற்கெல்லாம் அனுமதி தருகின்றனர் என்று பரவலாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது என்பது குறித்துக் கேட்டதற்கு, "அனுமதி கொடுக்கவில்லை என்றால் திமுகவின் மீதுதான் குற்றம் சாட்டுவீர்கள். நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை.

நான் இங்குப் போட்டியிடுவதால் தான் மோடி வருகின்றார். ரோடு ஷோவை மணிப்பூர், குஜராத், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் செய்ய சொல்லுங்கள். பாஜக வென்றுவிட்டால் அருணாச்சல் பிரதேசம், தமிழகம் என அனைத்தும் தனித்தனியாகச் சென்று விடும்" என்றார்.

50 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் இடத்தில் மோடி வருகையால் பொதுக்கூட்டத்திற்கு மேடை அமைத்துள்ளார்கள் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது என்ற கேள்விக்கு, "இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை நடத்தும் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது. அது தவறு. இது அவர்களது வக்கிர புத்தியைக் காட்டுகிறது" எனப் பேசினார்.

இதையும் படிங்க: "நான் அங்கிருந்தால் கத்தி எடுத்து வெட்டியிருப்பேன்" - வேலூர் பிரச்சாரத்தில் கொந்தளித்த கதிர் ஆனந்த்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.