ETV Bharat / state

திருவண்ணாமலையில் விவசாயிடம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது! - Tiruvannamalai VAO arrest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 7:54 PM IST

Tiruvannamalai VAO arrest: திருவண்ணாமலை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான குழு அதிரடியாக கைது செய்தது.

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் புகைப்படம்
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அடுத்த ஆத்துரைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதில் மூன்று மகன்கள் திருமணமாகி வெவ்வேறு வீடுகளில் வசித்து வரும் நிலையில், மற்றொரு மகனான மாணிக்கம் பெற்றோருடன் வசித்து வருகிறார். டிப்ளமோ வரை படித்துள்ள மாணிக்கம், தந்தை சேகருடன் சேர்ந்து தங்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் 75 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், தந்தை சேகர் கடந்த ஜனவரி 25ஆம் தேதி சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக 50 சென்ட் இடத்தை கிரையம் செய்துள்ளார். இது தொடர்பாக மாணிக்கம் கடந்த பிப்ரவரி மாதம் தேவிகாபுரத்தில் உள்ள இ சேவை மையத்துக்குச் சென்று, தனது பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார்.

இதனையடுத்து, ஆத்துரைச் கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் மற்றும் கிராம உதவியாளர் பூங்கொடி ஆகியோர், மாணிக்கத்தை அழைத்து விசாரணை செய்து 'பட்டா பெயர் மாற்றம் செய்ய அலுவலகச் செலவிற்கு 3 ஆயிரம் ரூபாய் வேண்டும்' என்று கேட்டுள்ளனர்.

அதற்கு மாணிக்கம் 'நான் அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய அனைத்து கட்டணத்தையும் கட்டி விட்டேன், நானே ஒரு விவசாயக் கூலி' என கூறிவிட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 2 மாதம் ஆகியும் பட்டா மாற்றப்படாமல் இருந்ததால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆத்துரை கிராம நிர்வாக அலுவலரைச் சந்திக்கச் சென்ற மாணிக்கம் பட்டா பெயர் மாற்றம் சம்பந்தமாக கேட்டபோது, அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி 'பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சப் பணம் எடுத்து வந்தாயா' என்று கேட்க, அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

அதற்கு பூங்கொடி 'லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் இங்கு வேலை நடக்காது' என கூறியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த மாணிக்கம், கிராம நிர்வாக அலுவலர் எங்கே என்று கேட்க, அவர் தேவிகாபுரம் சென்றுள்ளதாக பூங்கொடி தெரிவித்துள்ளார். பின்னர் மாணிக்கம், கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது பேசிய சிலம்பரசன், 'என்னை நேரில் சந்தித்து 3 ஆயிரத்தை கொடுத்தால் மட்டுமே பட்டா மாற்றம் செய்ய பரிந்துரைப்பேன்' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணிக்கம், திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் நேற்று மாலை விஜிலென்ஸ் டிஎஸ்பி திருவேல் முருகனைச் சந்தித்து, நடந்ததைச் சொல்லி புகார் மனுவை கொடுத்திருக்கிறார்.

அதனை ஏற்றுக் கொண்ட டிஎஸ்பி திருவேல், நடந்த சம்பவத்தை விசாரணை செய்து, ரசாயனம் தடவிய 3 ஆயிரம் லஞ்சப் பண நோட்டுகளை மாணிக்கத்திடம் வழங்கி இதை கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனை பொதுவான இடத்துக்கு வரவழைத்து கொடுக்கும்படி திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, இன்று காலை மாணிக்கத்தின் அழைப்பை தொடர்ந்து, சேத்துப்பட்டு செஞ்சி சாலைக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனிடம், ரசாயனம் பூசிய லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார் மாணிக்கம். இதை அங்கு மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்த டிஎஸ்பி வேல்முருகன், காவல் ஆய்வாளர் மைதிலி மற்றும் குழுவினர் சுற்றி வளைத்து, விசாரணை செய்து சிலம்பரசனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, சிலம்பரசன் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல, கடந்த மாதம்தான் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காட்டிக்கொடுத்த குரல்வளை? - உடற்கூறாய்வு அறிக்கையால் சூடாகும் ஜெயக்குமார் வழக்கு! - Tirunelveli Jayakumar Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.