ETV Bharat / state

ஆர்.எஸ்.எஸ் தூதர் போல ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார் - வைகோ கடும் கண்டனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 1:46 PM IST

vaiko condemned the tn governor
தமிழக ஆளுநருக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்

MDMK General Secretary Vaiko: வழக்கிழந்து போன வடமொழியைப் புறந்தள்ளிய கால்டுவெல் குறித்து, சனாதன கும்பல் தொடர்ந்து பரப்பி வரும் அவதூறுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தன் பங்கிற்கு ஆதரித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையில், அய்யா வைகுண்டரின் 192வது பிறந்த நாள் விழா நேற்று (04.03.2024) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 'மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு' என்ற புத்தகத்தை ஆளுநர் ரவி வெளியிட்டுப் பேசினார்.

அப்போது அவர், "அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம், சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தைக் காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார். சனாதனக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். பாரத மக்களின் மொழி, உணவு, உடைகள் வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் ஒன்றாக இருந்ததற்குக் காரணம் சனாதன தர்மம்தான்.

பிரிட்டிசார் இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க முயன்றனர். ராபர்ட் கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் மத மாற்றத்துக்காக பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டவர்கள். யாரோ எழுதி, எங்கோ படித்திருக்கிறேன். கால்டுவெல் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவர். அவர்கள் இருவரும் சென்னை மாகாணத்தில் மதமாற்றத்தைச் செய்தார்கள். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ஆளுநரின் இந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில், ஆளுநரின் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், கடந்த 2023 அக்டோபர் மாதம் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டுவெல் போன்றோர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் எனப் பேசினார்.

தமிழக வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல், ராபர்ட் கால்டுவெலின் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூல். அந்த நூலையும், அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் உலக அளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும், தமிழர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.

வடமொழியைத் 'தேவ பாஷை' என உயர்த்தி, தமிழை 'நீச்சபாஷை' எனத் தாழ்த்தி, வடமொழி வழிவந்தவை தான் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் என உரைகளின் வழியாக வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழி மற்றும் அரசியல் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல்.

தமிழ் மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும், தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும், தமிழ் மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் என்றும், இவையாவும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை எனவும், திராவிட மொழிகளைத் திருந்திய, திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும், தம் ஆய்வு முடிவுகளைக் வெளிப்படுத்தியவர் கால்டுவெல்.

தமிழ், வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டினார். இதுநாள் வரை தமிழ்ப் பகைவர்களால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப், பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச் செய்ததனாலேயே, கால்டுவெல் தமிழ் உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது.

கால்டுவெல்லின் வருகை கிறித்தவ மதப்பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண்டது தான். எனினும், கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால், தமிழரின் வரலாற்றோடு ஒன்று கலந்து இருக்கிறார். வழக்கிழந்து போன வடமொழியை புறந்தள்ளிய ராபர்ட் கால்டுவெல் குறித்து, சனாதன கும்பல் தொடர்ந்து பரப்பி வரும் அவதூறுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தன் பங்கிற்கு தூக்கிக் கொண்டு திரிகிறார்.

சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல், அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்திய, சனாதனத்தின் எதிரியாக திகழ்ந்த அய்யா வைகுண்டரை சனாதனத்தின் காவலர் என்று உளறிக் கொண்டு இருக்கிறார் ஆளுநர். ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போல ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்துத்துவ கோட்பாட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருவது கடுமையான கண்டனத்துக்குரியது.

இதையும் படிங்க: ஜி.யூ.போப், கால்டுவெல் படிக்காதவர்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.