ETV Bharat / state

"சுவையான ஆட்டு பிரியாணி கோவைக்கு ரெடி" - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேச்சு! - TRB Rajaa Vs Annamalai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 11:00 PM IST

Minister TRB Rajaa about BJP: “எதிர் அணியில் யார் இருந்தாலும் மிகப்பெரிய அளவில், எல்லோரும் டெபாசிட் இழக்கும் அளவில் திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார், பாஜகவின் தேசிய தலைவரே இங்கே போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார்கள் என கோவை தொகுதியில் திமுக வேட்பாளரை அறிமுகப்படுத்திய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார்.

அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேச்சு
"சுவையான ஆட்டு பிரியாணி கோவைக்கு ரெடி"

"சுவையான ஆட்டு பிரியாணி கோவைக்கு ரெடி"

கோயம்புத்தூர்: கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுகக் கூட்டம் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, முத்துசாமி, சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் முத்துசாமி, “கோவை தொகுதியை விட்டு தந்த கூட்டணி கட்சிக்கு நன்றி.

கோவை ஒரு முக்கியமான தொகுதி, இங்கு மாபெரும் வெற்றி பெற வேண்டும். வீடு வீடாக மக்களைச் சந்திப்பது தான் வெற்றியை தேடி தரும். செந்தில் பாலாஜி நிறைய பணிகளை செய்துள்ளார். இன்றும் அவர் கோவையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். கோவையில் வேறு யாரும் நுழைந்து விடக்கூடாது.

உங்களை மீறி நாடாளுமன்றத்தில் அண்ணாமலை எதுவும் செய்துவிட முடியாது. பயம் இருப்பதால் தான் பாஜகவினர் கோவையைச் சுற்றி வருகிறார்கள். அவர்கள் ஆயிரம் கூட்டம் நடத்தினாலும், 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம். மத்தியில் நமது கூட்டணி அரசு அமைந்தால், நமக்கான நிறைய திட்டங்களை பெற முடியும். மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்”, என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு மின்னிக் கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கே திராவிட மாடல் ஆட்சியைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ஒவ்வொரு இந்திய மக்களிடம் இருந்து வருகிறது. இந்தியா கூட்டணி மகத்தான ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை, இந்தியாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பெற வேண்டும் என்ற முயற்சியில் ஒட்டுமொத்த கூட்டணி கட்சிகளும் முயற்சி மேற்கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற எண்ணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றிக்கு வழி சேர்க்கும் வகையில் உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியா கூட்டணியில் வேட்பாளர் மகத்தான வெற்றியைத் தருவார் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் தெரிந்திருக்கிறது.

எதிரணியினர் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். முதல்வரின் ஆட்சியை இந்தியாவே வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு நபரும் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியைக் கண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பார், அப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியை தமிழக மக்கள் கண்டிருக்கிறார்கள்.

எதிரில் யார் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் எல்லோரும் டெபாசிட் இழக்கும் அளவில், திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார். பாஜகவின் தேசியத் தலைவரே இங்கே போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார்கள். இதனை சாதாரண ஒரு தேர்தலாக பார்க்கக்கூடாது. ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று வருகிற எதிரணியை வீழ்த்த தமிழினமே துடிக்கிறதே. தமிழினத்திற்கு எவ்வளவு பெரிய துரோகத்தை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாநிலத்தை எவ்வளவு புறக்கணித்து வருகிறார்கள். எதை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்பார்கள். மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிளவுபடுத்துவதை தவிர, வேறு என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள். இந்த வளர்ச்சியை இந்த பகுதிக்கு கொடுத்து இருக்கிறேன் என்று எதைச் சொல்லி ஓட்டு கேட்பார்கள்?

ஆனால், திமுகவினர் மகளிர் உதவித்தொகை, நான் முதல்வன் என்ற மகத்தான திட்டத்தையும், காலை உணவுத் திட்டத்தையும், கோவைக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கொடுக்கப்போகும் புதிய விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை பேச முடியும்.

மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சியை கொடுக்கப் போகிறோம். ஏற்கனவே, தொழில் வளர்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறோம். ஏறத்தாழ 10 லட்சம் கோடியை மூன்றறை ஆண்டுகளில் கொண்டு வந்து கொடுத்த முதல்வர் எங்களிடம் இருக்கிறார். மகத்தான வளர்ச்சியை கோவைக்கும் கிட்டும் என்று நாங்கள் சொன்னால் மக்கள் நம்புவார்கள், ஆனால், எதிரே இருப்பவர்கள் எதைச் சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.

வடையும், அல்வாவையும் தான் மக்களுக்கு கொடுக்கிறார்களே தவிர, வேறு எதையும் செய்யவில்லை. எல்லா இடத்திலும் ஒன்றிய அரசு கொடுத்த அல்வாவையும், மோடி சுட்ட வடையும் பற்றி மக்களிடம் கூறியிருக்கிறோம். எல்லோரும் மத்திய அரசு மீது மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு, ஒட்டுமொத்த தொகுதிகளும் நிச்சயமாக இண்டியா கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெறும்.

தேர்தல் ஆணையம் எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும், ஜனநாயகத்தின் ஒரே பாதுகாவலனாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றுதான் இந்த கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். முதலில் அதிமுக இருக்கிறதா? இருந்தால் அதைப் பற்றி பேசலாம்.

அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான் என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. அதிமுக எங்கே வேலை செய்கிறது என்ற கேள்வியும் இருக்கிறது. கோவையில் இரண்டாம் இடத்திற்கான போட்டி கடுமையாக இருப்பதை பொறுத்து இந்தக் கேள்விக்கான பதில் அமையும்”, எனத் தெரிவித்தார்.

முன்னதாக கட்சியினர் மத்தியில் பேசிய டி.ஆர்.பி.ராஜா, “திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது, கோவை நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமல்ல, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் பிரியாணி போடுவதாக சொல்லியுள்ளார்கள். அதுவும் மட்டன் பிரியாணி சுவையான ஆட்டு பிரியாணி” என்றார்.

இதையும் படிங்க: "ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் விளக்கம் அளிப்பார்” - அண்ணாமலை பேட்டி! - BJP Candidate List

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.