ETV Bharat / state

பாஜக நிர்வாகி மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திருப்பம்.. பெண் உள்ளிட்ட மூவர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 12:48 PM IST

திண்டுக்கல் அருகே கடன் தொல்லையில் கணவன் - மனைவி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், வத்தலகுண்டை சேர்ந்த தம்பதி மற்றும் தனியார் நிதி நிறுவன ஊழியர் ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவன் மனைவி தற்கொலை வழக்கில் மூவர் கைது
கணவன் மனைவி தற்கொலை வழக்கில் மூவர் கைது

திண்டுக்கல்: வத்தலகுண்டு அடுத்த அருணாசலம்புரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). வத்தலகுண்டு பகுதியில் மொபைல் கடை நடத்தி வரும் இவர், பாஜக இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஈரோட்டை சேர்ந்த சிவதர்ஷினி(29) என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு மகள்கள் உள்ளனர்.

மணிகண்டன் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே உள்ள எம்.வாடிப்பட்டியில் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2ஆம் தனது கடையில் பணிபுரியும் நபர் மூலம் தனது இரு குழந்தைகளையும் ஈரோட்டில் உள்ள சிவதர்ஷினியின் தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குழந்தையை அனுப்பி வைத்தது குறித்து சிவதர்ஷினியின் உறவினர்கள் செல்போன் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், யாரும் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அவர்களின் வீடும் நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.

அப்போது, கணவன் மனைவி இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டிவீரன்பட்டி காவல் துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலையைக் கைவிடுக
தற்கொலையைக் கைவிடுக

மேலும், அவர்கள் தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், மணிகண்டன் வத்தலகுண்டு காந்தி நகரில் வசிக்கும் ஆஷா(21) என்பவரது பெயரில் தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் ரூபாய் 2 லட்சம் வரை கடன் பெற்று, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை வாங்கியது தெரிய வந்துள்ளது.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பெற்ற கடனை திரும்ப செலுத்தும் படி ஆஷா, அவரது கணவர் ஆகாஷ் மற்றும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் தீபக் (19) ஆகிய மூவரும் மணிகண்டனை மிரட்டியதாகவும், இதனால் மன உளைச்சலில் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி சிவதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கடனை திரும்ப செலுத்தும் படி மிரட்டி, அவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக ஆஷா, அவரது கணவர் ஆகாஷ் மற்றும் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் தீபக் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் சீண்டல்; 82 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.