ETV Bharat / state

ஜூனுக்குள் நடக்கணும்.. காவிரி குறுக்கே.. முக்கொம்பு கதவணை பராமரிப்பு பணிகள் தீவிரம்..! - Mukkombu barrage shutters

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 1:26 PM IST

Mukkombu Cauvery river: திருச்சி, முக்கொம்பு காவிரி ஆற்றின் மேலணை கதவுகளை புதுப்பிக்கும் பணிகள் நீர்வளத்துறை மூலம் துவங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது.

முக்கொம்பு கதவணை புகைப்படம்
முக்கொம்பு கதவணை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1977 ஆம் ஆண்டு 41 மதகுகளுடன் கட்டிமுடிக்கப்பட்ட கதவணைகளை முழுமையாக பழுது பார்த்து, சீர்செய்யும் பணியில் நீர்வளத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி நீர் மேலணையை வந்தடையும் இடம் காவிரி - கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. இந்நிலையில், முக்கொம்பு பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1836 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 'ஆர்த்தர் காட்டன்' என்ற பொறியாளர் 45 மதகுகளுடன் கூடிய கதவணையை கட்டி முடித்தார்.

அதேபோல, அதன் அருகே கடந்த 1977ஆம் ஆண்டு, காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அன்றைய முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதி 41 மதகுகளுடன் கதவணையை கட்டிமுடித்தார். இந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆர்த்தர் காட்டன் கட்டிய கதவணை, 182 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உடைந்து சேதம் அடைந்தது.

அதில், 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பிறகு, அதன் அருகிலேயே கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் புதிய கதவணை கட்டிமுடிக்கப்பட்டு, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.

காவிரி நீர்: வரும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டு முக்கொம்பு மேல் அணைக்கு தண்ணீர் வரும்பட்சத்தில், அதனை சாகுபடி பாசனத்திற்காக தடையின்றி திறக்க வேண்டும். அதற்கு கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளையும், அதில் உள்ள கதவணைகளையும், கோடை காலத்திலேயே பழுது நீக்கி வைத்து அணையின் கட்டமைப்பை உறுதி செய்வது அவசியமாக உள்ளது.

ஒரு வினாடிக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றும் வகையில் காவிரி ஆற்றின் கதவணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம், டெல்டா பகுதியில் 12 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதற்கு எவ்வித தடையும் ஏற்படாத வகையில், முக்கொம்பு அணையில் பராமரிப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கதவணைகள்: காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கதவணையின் 41 செட்டர்களும் 12 மீட்டர் அகலம் கொண்டவை. அதில் உள்ள இரும்பு கதவுகள் கடந்த 46 ஆண்டு காலமாக தொடர்ந்து செயல்பட்டதன் விளைவாக அடிக்கடி பழுதாவதுண்டு. மேலும், இந்த ஷட்டரில் உள்ள ரோலர் சக்கரங்கள் பழுதானதால், ஷட்டர்களை மேலே தூக்கும் போதும் அல்லது கீழே இறக்கும் போதும் அடிக்கடி பழுதாகி நின்று விடுவது வழக்கம்.

எனவே, தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள சமயங்களில் அவற்றை இயக்குவதும் கடினமாகிறது. அந்த ஷட்டர்களின் எதிர்விசை கான்கிரீட் பெட்டிகள் சேதமடைந்து குறுக்கும், நெடுக்குமாக சிக்கிக் கொள்கின்றன. தண்ணீரை தடுக்கும் கதவுகளையும், அதனை தூக்கி இறக்க பயன்படும் எதிர்விசை கான்கிரீட் பெட்டிகளையும், அவற்றை இணைக்கும் இரும்பு சங்கிலிகளையும், அதன் ரப்பர் இணைப்புகளையும் சீர்செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவைகள் சேதமடைந்ததன் விளைவாக கடந்த காலங்களில் கதவணைகளை திறந்து முடுவதில் தடைகள் ஏற்பட்டன. அவ்வகையான பிரச்சனைகளை சரிசெய்யும் நோக்கத்துடன் தற்போது முழுமையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், தடுப்பணையின் கீழ் பகுதியில் மண்ணரிப்பின் காரணமாக சேதம் அடைந்த பகுதிகளை சீரமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கான திட்டப்பணிகளை மேற்கொள்ள, ரூபாய் 63 கோடி மதிப்பீட்டில் முன்மொழிவு ஒன்றை தமிழக அரசிடம் சமர்பித்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பிறகு அந்த பணிகளும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பனிக்கட்டிகள் இல்லை.. கெலவரப்பள்ளி அணையில் பொங்கிய ரசாயன நுரை - விவசாயிகள் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.