ETV Bharat / state

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்: சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்க நீதிமன்றம் மறுஉத்தரவு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 6:47 PM IST

Balveer Singh Case: விசாரணை கைதிகளின் பற்களை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரத்தில் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Balveer Singh Case
விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதில், "அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் என்மீது, பொய்யான வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோத காவலில் வைத்து காவல்துறை அதிகாரிகள் என்னைக் கடுமையாகத் தாக்கினர்.

அப்போது என்னுடைய நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. இதில் நான் மட்டுமன்றி, விசாரணை கைதிகள் மேலும் சிலரது பற்களையும் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி சித்ரவதை செய்தார். ஆகவே, அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10 அன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளை எனக்கு வழங்க வேண்டும்.

இதுமட்டும் அல்லாது, இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ் மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர் விசாரணை அறிக்கைகளை எனக்கு வழங்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரர் வசம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்க உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (பிப்.12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தென்மண்டல காவல்துறை தலைவர் தரப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 213 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுப் பதிவாகும் காட்சிகள் மென்பொருள் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

இதுமட்டும் அல்லாது, மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமரா செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்க முடியாது என வாதிடப்பட்டது.

இதனை அடுத்து நீதிபதி இளங்கோவன், அம்பாசமுத்திரம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: கனிமவள நிறுவனங்களிடம் ராயல்டி வரி வசூலிக்கத் தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.