சென்னை: போதைப் பொருளான கொக்கைனை நடிகர் விஜய், தனுஷ், நடிகை திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பயன்படுத்தியதாக பாடகி சுசித்ரா முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி உள்துறை செயலாளர் அலுவலகத்தில் இன்று (மே 20) மனு அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திரை நட்சத்திரங்கள் சிலரது பெயரை குறிப்பிட்டு, அவர்கள் போதிப்பொருள் பயன்படுத்துவதாகக் கூறி பாடகி சுசித்ரா பேசி, யூடியூபில் வெளியான வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அலுவலக உதவியாளரிடம் புகார் மனுவை அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரலட்சுமி, "கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இளைய சமூகம் சீரழிக்கின்ற வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி இளம் சிறார்கள் மத்தியிலும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் புழக்கத்தில் வந்துள்ளது. இதனால் மாணவர்களின் உடல்நலன், கல்வி, அறிவு என அனைத்தும் நாசமாவதோடு இளைய சமூகத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
போதைப் பொருளான கொக்கைனை பிரபல நடிகர் நடிகைகள் பயன்படுத்தியதாக பாடகி சுசித்ரா கூறியுள்ள நிலையில் நடிகர்கள் விஜய், தனுஷ், நடிகைகள் திரிஷா, ஆண்ட்ரியா, விஜய் ஏசுதாஸ், கார்த்திக் குமார் ஆகியோரிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு அவர்களை கைது செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படாமல் போனால், போதைப் பொருள் பயன்படுத்தினால் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்ற எண்ணம் ஏற்பட்டு விடும்.
இந்த திரை பிரபலங்கள் கொக்கைனை பயன்படுத்தினார்களா?, அப்படி பயன்படுத்தி இருந்தால் எப்படி அது அவர்களுக்கு எப்படி கிடைத்தது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் சுசித்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் பட்டியல் சமூகத்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக வெளியான ஆடியோ குறித்தும் விசாணை நடத்தி அவரை கைது செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.