ETV Bharat / state

இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்..! - 10th Public Exam in TN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 7:39 AM IST

Updated : Mar 26, 2024, 11:09 AM IST

10th Public Exam in TN: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. 9,10,024 பேர் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10th Public Exam in TN
10th Public Exam in TN

சென்னை: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 26) முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 616 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும் தனித்தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 மாணவர்கள் எழுத உள்ளனர். அவர்களுக்காக 4 ஆயிரத்து 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டாயம் தமிழ் பாடத் தேர்வை எழுதுவதில் இருந்து சிறுபான்மை மாற்றுமொழி மாணவர்களில் விண்ணப்பம் செய்தவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் பொதுத் தேர்வை நடத்துவதற்கான உரிய முன்னேற்பாடுகளை செய்துள்ளது. அந்தவகையில், கேள்வித்தாள் பாதுகாப்பாக 304 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 3 ஆயிரத்து 350 பறக்கும் படை உறுப்பினர்களும், நிலையான பறக்கும் படை ஆயிரத்து 214 பேரும், தேர்வை கண்காணிக்கும் பணியில் 48 ஆயிரத்து 700 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 810 பள்ளிகளில் படிக்கும் 66 ஆயிரத்து 771 மாணவ மாணவிகள் 288 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்கும் பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 323 பேரும், துறை அலுவலர்கள் 330 பேரும், அறை கண்காணிப்பாளர்கள் 3 ஆயிரத்து 400 பேரும், பறக்கும் படையில் 668 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் ஆகிய சிறைச்சாலையில் உள்ளவர்களும் தேர்வு எழுதுவதற்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விதிகளின் சலுகைகளை வழங்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் மாணவ மாணவிகளுக்கான குடிநீர், இருக்கைகள், மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரியான முறையில் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன். அதேபோல், தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்கள் இவைத்திருப்பதை கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவ மாணவிகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் தொடர்பு கொள்வதற்காக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதற்காக 9498383076, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட வழக்கிலிருந்து விலகினார் உயர் நீதிமன்ற நீதிபதி!

Last Updated :Mar 26, 2024, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.