ETV Bharat / state

சென்னை மெரினாவில் இன்று மாலை திறக்கப்படும் 'கலைஞர் நினைவிடம்' - சிறப்பம்சங்கள் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 11:55 AM IST

Updated : Feb 26, 2024, 12:05 PM IST

Kalaignar Memorial: சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திறக்கப்படவுள்ளது.

கலைஞர் நினைவிடம்
கலைஞர் நினைவிடம்

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் அருகே ரூ.39 கோடி செலவில் 'கலைஞர் நினைவிடம்' அமைக்கப்பட்டது. நூலகம், மினி திரையரங்கம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த நினைவிடத்தை இன்று மாலை 7 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

கருணாநிதி சிலை: அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி அமர்ந்த நிலையில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கருணாநிதி சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்றதற்காக பாராட்டி எழுதிய 'தமிழ் செம்மொழி' என்ற கடிதம் தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி சமாதியின் பின்புறம் அவரது உருவம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. உதயசூரியன் வடிவமைப்பில் உள்ள இந்த உருவம் பகலில் வெள்ளை நிறத்திலும், இரவு நேரத்தில் லேசர் ஒளியில் ஜொலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் உலகம்: கருணாநிதி சமாதிக்கு பின்னால் 'கலைஞர் உலகம்' என்ற டிஜிட்டல் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளே 'கலைஞரின் எழிலோவியங்கள்' என்ற பெயரில் கருணாநிதியின் இளமைக் காலம் முதல் அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள், போராட்டங்கள், அவர் நிறைவேற்றிய திட்டங்கள் ஆகியவை புகைப்படத் தொகுப்பாக இடம்பெற்றுள்ளது. அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திருவள்ளுவர் சிலை, அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்கள் புகைப்படமாக அமைக்கப்பட்டுள்ளன.

'கலைஞருடன் செல்பி எடுக்கலாம்': இதனை தொடர்ந்து 'கலைஞருடன் ஒரு செல்பி' என்ற அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் அமர்ந்திருக்கும் தோற்றத்தில் இருக்கிறார், அங்கு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அந்த புகைப்படம் உடனே வேண்டுமென்றால் வாட்ஸப் மூலம் நமது செல்போனில் பெறும் வகையில் வசதி அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் 'கலைஞரின் சிந்தனை' என்ற அறையில் ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட 8 புத்தகங்களுடன் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. அதில் எந்த புத்தகத்தை தொட்டாலும் அது பற்றிய விளக்கம் வீடியோவாக தோன்றுகிறது.

சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருவாரூரைச் சேர்ந்தவர் என்பதால் 'சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்' என்ற அறையில் நுழைந்தவுடன் திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அந்த ரயிலில் சென்றால் தஞ்சை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களைக் கடக்கும் போது அந்தந்த ஊர்களில் கருணாநிதி வாழ்க்கையில் தொடர்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றுகிறது.

மினி திரையரங்கம்: 'கலையும் அரசியலும்' என்ற தலைப்பில் கருணாநிதி குறித்த வாழ்க்கை வரலாறு குறும்படமாகத் திரையிடப்படுகிறது.

கருணாநிதியின் நினைவிடத்தை மக்கள் பார்வையிட கட்டணம் எதுவும் கிடையாது. இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தை திறக்கவுள்ள நிலையில், திறப்பு விழா நிகழ்ச்சிக்கு திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட 'தேசிய முதியோர் நல மருத்துவமனையின்' சிறப்பம்சங்கள்!

Last Updated : Feb 26, 2024, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.