ETV Bharat / state

'கோயிலில் சமஸ்கிருதம் மீண்டும் வராமல் தடுக்க 'கை' சின்னத்திற்கு வாக்களியுங்கள்' - கார்த்தி சிதம்பரம் - Karti Chidambaram

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 1:14 PM IST

Karti Chidambaram: பாஜக ஆட்சிக்கு வந்தால் சமஸ்கிருதம், மேல்தட்டு முறைகளில் தான் வழிபாடு நடத்த வேண்டிய நிலை ஏற்படும் இதைத் தடுக்க வேண்டும் என சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Karti Chidambaram
Karti Chidambaram

கார்த்தி சிதம்பரம் தேர்தல் பிரச்சாரம்

சிவகங்கை: நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அந்த வகையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

இந்நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணி (INDIA Alliance) சார்பில், தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கலந்துக்கொண்டார்.

பின்னர், ஆலோசனைக் கூட்டத்தில் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது, “பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்களை அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள். நமது பழக்கவழக்கங்களுக்கு தடை போடுவார்கள். கோயிலுக்குள் வருவதற்கும் சட்டம் போடுவார்கள். கோயிலில் கிடா வெட்டுவதற்கு, சேவலை நேர்த்திக் கடனாக செலுத்துவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். கோயிலில் சமஸ்கிருதம், மேல்தட்டு முறைகளில்தான் வழிபாடு நடத்த வேண்டும் என்று கூறுவார்கள்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் வருமானம் கூடாமல், செலவு கூடிவிட்டது. இதுதான் பிரதமர் மோடி அரசின் அவலநிலை. இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் வரி கட்டுகின்றனர். இந்தியாவில் வரி கட்டாத ஆட்களே கிடையாது. ஆனால், தமிழக மக்கள் கட்டும் வரிப்பணம், வடமாநிலத்தில் செலவு செய்யப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்திற்கு அதிக நிதி கிடைக்க வேண்டும் என்றால் மத்தியில் ஆட்சியில் மாற்றம் வரவேண்டும்.

முதலமைச்சர்களை கைது செய்து பயமுறுத்துகின்ற அசாதாரண சூழல், இவர்களது ஆட்சியில் நிலவுகிறது. தமிழக அரசிற்கு பாதுகாப்பு வேண்டுமென்றால், அதனை சார்ந்துள்ள அரசு மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும். தமிழக அரசின் 4 முத்தான திட்டங்கள் தொடர வேண்டுமென்றால், கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 'திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் குற்ற சம்பவங்கள்..இந்நிலை மாற அதிமுகவிற்கு வாக்களியுங்கள்' - பிரேமலதா விஜயகாந்த் - Peramalatha Vijayakanth

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.