ETV Bharat / state

மாணவர்களுக்கு ரூ.1,000.. வரும் கல்வியாண்டு முதல் தமிழ் புதல்வன் திட்டம் - சிவ்தாஸ் மீனா தகவல்! - Tamil Pudhalvan Scheme

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 4:01 PM IST

Tamil Pudhalvan Project: வரும் கல்வி ஆண்டு முதல் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் ’தமிழ் புதல்வன் திட்டம்’ தொடக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Tamil Pudhalvan Project
கல்லூரிக் கனவு 2024 தொடக்க விழாவின் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர் சந்திப்பு (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024-இன் தொடக்க விழா இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தைப்போல், மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் "தமிழ் புதல்வன் திட்டம்" வரும் கல்வியாண்டிலேயே தொடக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, “கடந்த 3 ஆண்டுகளில் துவங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் புரட்சித் திட்டங்கள். அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்னும் நோக்கில் தான் திட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்பட்டது. ‘பசித்தவனுக்கு உணவு கொடு பின்னர் போதனை செய்’ என்னும் விவேகானந்தரின் சொல்லுக்கு ஏற்ப காலை உணவு திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த தலைமுறை மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. உயர்கல்வி சேர்வோர் விகிதம் தமிழ்நாட்டில் உயர, இந்த நான் முதல்வன் திட்டம் மிக உதவியாக உள்ளது. 30 ஆயிரத்து 269 மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான துறைகளை எடுத்து பயில இந்த திட்டம் உதவியாக உள்ளது. நிலம், பணம் உள்ளிட்ட முதலீட்டை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். கல்வி என்னும் முதலீட்டை யாராலும் எடுக்க முடியாது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் படிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் சராசரி அதிகமாக உள்ளது. இருந்த போதிலும் தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது இலக்கு.

மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல் உள்ளிட்ட ஏதாவது ஒரு படிப்பில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் திட்டமாக உள்ளது. இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்து யாரெல்லாம் கல்லூரியில் சேராமல் இருக்கிறார்களோ அவர்களை கண்டறிய நாங்கள் குழு அமைத்துள்ளோம். அதன் மூலமாக அவர்களை கண்டறிந்து மாணவர்களை ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்த்து உயர் கல்வி படிக்க வைக்க திட்டம் வைத்துள்ளோம்.

நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம் போன்றவை உயர்கல்வித்துறையில் மாணவர்கள் சேர்வதற்கு ஊக்கமாக இருக்கும். தமிழக அரசின் முயற்சியால் கடந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 20 - 25 சதவீதம் கல்லூரி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்த வகையில், இந்த கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளோம். தமிழக அரசின் நோக்கம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் 100 சதவீதம் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும். இடைநிற்றல் இருக்கக் கூடாது” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா திடீர் கோளாறு..காரணம் என்ன? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.