ETV Bharat / state

'' பெற்ற மகனுக்கு ரூ.2000 கொடுக்கல, 1 கோடிக்கு வீடு''? சவுக்கு சங்கரின் மனைவி பகீர்.. பரபரக்கும் பதிவுகள்! - savukku shankar wife

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 6:42 PM IST

Savukku Shankar's wife: பல்வேறு வழக்குகளில் கைதாகியிருக்கும் சவுக்கு சங்கர் குறித்து அவரது மனைவியின் எக்ஸ் வலைத்தளப் பதிவுகள் பேசு பொருளாகியுள்ளது.

கைதான சவுக்கு சங்கர் புகைப்படம்
கைதான சவுக்கு சங்கர் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார், அவரை மே 4ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, கஞ்சா வைத்திருந்ததாகவும், பெண் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தேனி காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சென்னை, திருச்சி என மொத்தம் ஏழு வழக்குகள் அவர் மீது பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டுள்ளது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கர் மீது இத்தனை வழக்குகள் இருக்கும் நிலையில், அவரது மனைவியும், வழக்கறிஞருமான நிலவு மொழி என்பவர் ''எக்ஸ்'' வலைத்தளத்தில் சவுக்கு சங்கரை குறித்து பல விஷயங்களை பதிவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டாலும் தற்போதும் சட்டப்படி தான் தான் அவரது மனைவி என நிலவு மொழி குறிப்பிட்டுள்ளார்.

''ஊழலுக்கு எதிராக அடையாளம் காட்டிக்கொண்ட சங்கரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள நிலவு மொழி, தனது மகனுக்கு மாதம் 2 ஆயிரம் தரமாட்டேன் என்று நீதிமன்றம் சென்ற சங்கர், வேறொரு பெண்ணுக்கு 1 கோடி ரூபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக'' விமர்சித்துள்ளார்.

சவுக்கு சங்கர் மனைவி நிலவு மொழியின் பதிவு;

''ஊழலுக்கு எதிராக அடையாளம் காட்டிக்கொண்ட சங்கரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எனக்கு தெரிந்த சங்கருக்கு மாத சம்பளம் 35 ஆயிரம். (தனியார் நாளிதழில்) வந்த 10,000₹ சேர்த்து என்னோட டெலிவரி செலவுக்கு வைச்சது...

இன்னொரு பெண்ணுக்கு பத்துகோடி மதிப்புள்ள சொத்து வாங்கிக்கொடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான், எனது மகனிற்கு 2000₹ வழங்கமாட்டேன் என நீதிமன்றத்தில் நின்றார். திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆன மாதிரி, இன்னைக்கு சங்கரோட கார் மதிப்பு மட்டுமே பல லட்சங்கள்...

அரசியல்வாதிகளின் ஏகபோக வாழ்விற்கு ஆதரவாக, மக்களுக்கு எதிராக நிற்கும் சங்கரின் தனிப்பட்ட வாழ்வு குறித்து எனக்கு கவலையில்லை. அந்த தனிப்பட்ட வாழ்க்கையே பினாமியாக இருக்கும்பட்சத்தில், அதை வெளிக்கொணருவதில் தவறில்லை...

தூத்துக்குடி கலவரத்திலிருந்து, ஸ்ரீமதி இறப்பு வரை அவன் ஆதரவுக்கரம் நீட்டியது மக்களுக்கு இல்லை. மணல் மாஃபியாவிலிருந்து, காசா கிராண்ட், ஜிஸ்கொயர் போன்ற நிறுவனங்கள் வரை ஆரம்பித்து பின் அமைதிகாத்த அவனின் கள்ளமெளனம் கேள்விக்குரியது...

4மாத குழந்தையுடன், எனது பெற்றோருடன் இருந்த பொழுது, என்னைக் குறித்து சவுக்கு தளத்தில் ஆபாசமாக எழுதுவேன் என மிரட்டியதோடு, அப்பொழுது VAO வேலை செய்த எனது அப்பாவை வேலையை விட்டு தூக்க வழிவகை செய்வேன் எனவும் மிரட்டினான் அவன்...

அதன் பின்பு, அவன் சம்மந்தப்பட்டவற்றை முழுவதுமாய் நிராகரித்தேன். எவ்வித பின்னணியுமின்றி, அவனது மிரட்டல்களை, ச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என துப்பிச் சென்றேன். அப்படியான மிரட்டல்களே இன்று அவனுக்கு பல மடங்கு அன்பளிப்புகளுடன், கோடிகளில் புரள வைத்திருக்கிறது போலும்..

அரசியல் காரணங்களுக்காகவே அவன் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. ஆனால், மனித உரிமை ஆர்வளர்களுக்கு, அரசு அடக்குமுறையை தினந்தினம் அனுபவிக்கும் சாதாரண ஏழை, நடுத்தர வர்க்க மனிதர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா? திடீரென கோடியில் புரளுபவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா? '' என சவுக்கு சங்கரின் மனைவி தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ''சாதாரண ஒரு பெண்ணுக்கு அசையா சொத்துகள்(100 பவுன்), அசையும் சொத்துகள்(1கோடி வீடு) எப்படி வந்தது? அப்பெண்ணின் அக்கெளண்ட் டிரான்ஸ்சேக்‌ஷன் பழையதும், சங்கரின் நட்புக்கு பிறகான கணக்குகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

பி.கு: சங்கரின் சட்டப்பூர்வ மனைவி நான்'' என குறிப்பிட்டு வருமானவரித்துறையை டேக் செய்துள்ளார். சவுக்கு சங்கர் பல்வேறு வழக்குகளில் கைதாகியிருக்கும் சூழலில் அவரது மனைவியின் பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீது எத்தனை வழக்குகள்? முழு விவரம் இதோ..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.