ETV Bharat / state

கூலித்தொழிலாளி டூ உரிமையியல் நீதிபதி.. மயிலாடுதுறை நபரின் விடாமுயற்சி சாத்தியமானது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 2:33 PM IST

Civil Judge: மயிலாடுதுறை அருகே கூலி வேலை பார்த்து, 36 வயதில் நீதிபதியாக உயர்ந்த கூலித்தொழிலாளியின் மகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Sankaranpandal daily wages man become a civil judge
கூலி வேலை பார்த்து 36 வயதில் நீதிபதியாக உயர்ந்த கூலி தொழிலாளியின் மகன்

கூலி வேலை பார்த்து 36 வயதில் நீதிபதியாக உயர்ந்த கூலி தொழிலாளியின் மகன்... குவியும் பாராட்டுக்கள்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம், சங்கரன்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் - அஞ்சம்மாள் தம்பதியினர். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். குடும்பத்தின் ஏழ்மை காரணமாக, இவர்களது மகன் பாலதண்டாயுதம் சிறு வயது முதலே கூலி வேலைக்குச் சென்று, தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.

சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்த இவர், ஏழ்மை நிலை காரணமாக படிக்க வசதியின்றி 7 ஆண்டுகள் பல்வேறு கூலி வேலைகளுக்குச் சென்று உள்ளார். இருப்பினும், தான் வழக்கறிஞராக வேண்டும் என விடாமுயற்சியில், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எழுத்தராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அதன் பின்னர், பூம்புகார் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் படிப்பை முடித்து, பின்னர் திருச்சி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், அரசு சட்டக் கல்லூரியில் 3 ஆண்டுகள் சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து, மயிலாடுதுறை மற்றும் செம்பனார்கோவிலில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். பெற்றோர் இறந்துவிட, திருமணமாகி தனது ஊரிலேயே வசித்து வந்த இவர், வழக்கறிஞராக இருக்கும் பொழுதுதான் நீதிபதியாக வேண்டும் என்ற எண்ணத்தில், கடும் போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

பின்னர் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்று, தனது 36வது வயதில் உரிமையியல் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளார். மேலும், 2015-க்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக நீதிபதியாக இளைஞர் ஒருவர் தேர்வாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது குடும்பத்தினருடன் வீட்டில் அவர் கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டத்திலும் ஈடுபட்டார்.

ஏழ்மை நிலையிலும், விடாமுயற்சியிலும் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ள பாலதண்டாயுதத்திற்கு வீடு தேடிச் சென்று பலர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நீதிபதியாக தேர்வாகியுள்ள பாலதண்டாயுதம்,தன்னுடைய ஏழ்மை நிலையில் தன்னுடன் இருந்த தனது பெற்றோர், தற்பொழுதுதான் நீதிபதியாக தேர்வாகியுள்ள நிலையில் அதனை காண தன்னுடன் இல்லையே என ஆனந்தக் கண்ணீருடன் கூறினார். மேலும். யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் இருந்தால் சாதிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தந்தையை கொலை செய்த வழக்கு; தாய் - மகனுக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.