ETV Bharat / state

கரோனா காலத்தில் குவிந்த போக்சோ வழக்குகள்! அதிர்ச்சி ரிப்போர்ட் எதிரொலி - அரசுக்கு அன்புமணி ராமதாஸ் அவசர கோரிக்கை - POCSO PENDING CASES TAMILNADU

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 1:58 PM IST

Updated : May 15, 2024, 4:21 PM IST

Tamil Nadu POCSO cases: போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்திருப்பதன் காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் கோப்புப்படம்
அன்புமணி ராமதாஸ் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காலத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 14 ஆயிரத்து 31 பேர் கர்ப்பமாகி இருப்பதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 36 ஆயிரத்து 134 சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருக்கார்கள் என்றும் பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அதிர்ச்சியானத் தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் 36 ஆயிரம் சிறுமிகள் கர்ப்பம் ஆகியிருக்கும்பட்சத்தில் போக்சோவில் 14 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதில் குழந்தை திருமணங்களும் அடங்கி இருப்பதால் முறையாக புகார்கள் பதியப்படவில்லை. இந்த நிலையில், போக்சோ வழக்குகளில் இன்னும் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

போக்சோ: இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் எதிரிகள் விடுதலை செய்யப்படுவதும், வழக்கு விசாரணைகள் தேக்கமடைவதும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்திற்கு எதிரான திசையில் இவ்வழக்குகளின் விசாரணை செல்வது கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் போக்சோ சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்குகள், அவற்றில் தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்ட வழக்குகள், நிலுவையிலுள்ள வழக்குகள் ஆகியவற்றின் விவரங்களை மாநில குற்ற ஆவணக் காப்பகத்திடமிருந்து சென்னையைச் சேர்ந்த பிரபாகர் என்ற வழக்கறிஞர் பெற்றிருக்கிறார். அந்த விவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

4,020 வழக்குகள்: 2021ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் போக்சோ சட்டத்தின்கீழ் 4,020 வழக்குகள் தொடரப்பட்டன. ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளையும் சேர்த்து அந்த ஆண்டில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகளின் எண்ணிக்கை 9643 ஆகும். ஆனால், அவற்றில் வெறும் 955 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது மொத்த வழக்குகளில், 9.90% வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் கூட 202 வழக்குகளில், அதாவது 21.10% வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 753 (78.90%) வழக்குகளில் எதிரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த அளவுக்கு குற்றவாளிகள் தப்புவதை நியாயப்படுத்த முடியாது.

தீர்ப்புகள் குறைவு: 2022ஆம் ஆண்டிலும் அதே நிலைதான் தொடர்ந்திருக்கிறது. அந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக விசாரணைக்கு வந்த 13,399 வழக்குகளில் வெறும் 15.17%, அதாவது 2033 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கூட 25.77%, 524 வழக்குகளில் மட்டும் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 74.22 வழக்குகளில் எதிரிகள் தப்பியுள்ளனர். இதுவும் மிக அதிகம்.

போக்சோ வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதையும், தெய்வங்களுக்கு இணையாக போற்றப்பட வேண்டிய குழந்தைகளை சீரழித்தவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பிச்செல்ல அனுமதிக்கப்படுவதையும் அனுமதிக்கவே முடியாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்; அப்போது தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்ய மற்றவர்கள் அஞ்சுவார்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் வழக்குகளை விரைந்து விசாரிக்க வசதியாக சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், அதன் பிறகும் போக்சோ வழக்குகளின் விசாரணை தாமதிக்கப்படுவது சரியல்ல. இது குற்றவாளிகள் தப்பிக்கவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்கும் மட்டுமே வகை செய்யும்.

மன உளைச்சல்: அதேபோல், போக்சோ சட்டத்தின்படி தொடரப்படும் வழக்குகளில் நான்கில் மூன்று பங்கு வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. புலன்விசாரணைகளில் நடக்கும் குளறுபடிகளும், நீதிமன்ற விசாரணை தாமதப்படுத்தப்படுவதும் தான் இதற்கு காரணம் ஆகும். போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பெண் அதிகாரிகள் தான் விசாரணை நடத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட குழந்தைகள் மன உளைச்சல் அடையாத வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.

ஆனால், பெரும்பான்மையான வழக்குகளில் ஆண் அதிகாரிகள் தான் குழந்தைகளிடம் விசாரணை நடத்துகின்றனர். விசாரணையின்போது அவர்கள் எழுப்பும் வினாக்கள் குழந்தைகளை மனதளவில் காயப்படுத்துகின்றன. அதனாலேயே பல குழந்தைகள் விசாரணையின்போது தடுமாறும் சூழலும், பின்வாங்கும் நிலையும் உருவாகிறது. குற்றவாளிகள் தப்புவதற்கு இதுவே முதல் காரணமாகும்.

அதேபோல், ஒரு குறிப்பிட்ட ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு, அதன்பின் 3 அல்லது 4 ஆண்டுகள் கழித்து விசாரணைக்கு வரும் போது, அவ்வழக்கு தொடர்பான நுண்ணிய விவரங்களை குழந்தைகளால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதைக் காரணம்காட்டியே பாலியல் குற்றவாளிகள் விடுவிக்கச் செய்யப்படுகின்றனர். போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளைப் போல நடத்தப்படக் கூடாது. பெரும்பான்மையான வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு இதுதான் காரணமாகும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டுமானால், குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதை மனதில் கொண்டு போக்சோ வழக்குகளில் விசாரணை தாமதமாவதற்கு காரணங்கள் என்ன? குற்றவாளிகள் அதிக அளவில் விடுதலை செய்யப்படுவதற்கு காரணம் என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கோடையில் கண்புரை பாதிப்பு அதிகரிப்பா? - மருத்துவர் சொல்வது என்ன?

Last Updated :May 15, 2024, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.