ETV Bharat / state

கோவை ஈஷா யோகா மையத்தில் 8 ஆண்டுகளில் 6 பேர் மாயம்; உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்! - Isha Yoga Center

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 5:24 PM IST

Isha yoga Center: கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் 2016ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

coimbatore Isha foundation
coimbatore Isha foundation

சென்னை: தென்காசி மாவட்டம், குலசேகரபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி திருமலை. இவர், காணாமல் போன தன்னுடைய சகோதரை மீட்டுத் தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்ததாகவும், கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னை தொலைபேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா என கேட்டதோடு, 3 நாட்களாக ஈஷா யோகா மையத்திற்கும் வரவில்லை என்ற தகவலை தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த ஆலாந்துறை காவல்நிலையம், ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்துவதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி, காணாமல் போன தன் சகோதரர் கணேசனை மீட்டு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, கடந்த 2016 முதல் வெவ்வேறு தேதிகளில் இதுவரை 6 பேர் காணாமல் போய் உள்ளதாக தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க வேண்டும் என்றும், உரிய பதில் தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: "தலைமை எப்பொழுதும் சரியான முடிவெடுக்கும்" - சீட் மறுக்கப்பட்ட தருமபுரி எம்.பி செந்தில்குமார் கூறுவது என்ன? - DHARMAPURI SENTHILKUMAR

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.