ETV Bharat / state

திருப்பூரில் ஒரு "தானா சேர்ந்த கூட்டம்"..! அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து வசூல்! கும்பல் சிக்கியது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 11:03 PM IST

Robbery in Tiruppur: திருப்பூரில் அமலாக்கத்துறை என்று கூறி நூல் வியாபாரிகளிடம் 1 கோடியே 69 லட்ச ரூபாய் கொள்ளையடித்த கும்பலை 7 நாட்களில் போலீசார் கைது செய்ததுடன் 1.10 கோடி ரூபாய் உள்ளிட்ட சொத்துக்களை மீட்டனர்.

Robbery in Tiruppur
திருப்பூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவம்

திருப்பூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோடு, குமரன் நகர் 5வது வீதியைச் சேர்ந்தவர் அங்குராஜ். இவர் பழைய பஸ் நிலையம் அருகில் நூல் கமிஷன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது வியாபார நண்பரான திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த நூல் புரோக்கர் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பூர் பி.என்.ரோட்டை சேர்ந்த துரை என்கின்ற அம்மாசை, சுந்தரபாண்டியன், உதய சங்கர், பெனட், முருகவேல் பெருந்துறை ஆகியோரிடம் விஜய்கார்த்திக் என்பவர் போனில் வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டுள்ளார்.

அதில் அவர் ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கம்பெனி நிர்வாக இயக்குனர்களில் ஒருவர் என்றும், அவரது கம்பெனியின் வியாபார ரீதியாக பரிவர்த்தனை செய்த்தில் வெளிநாடுகளில் இருந்து வங்கி கணக்கில், கோடிக்கணக்கில் அதிகளவில் பணம் இருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விஜயகார்த்திக்கின் நிறுவனம் சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற ஊர்களில் தற்போது பெரிய அளவில் கட்டுமான பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் கட்டுமானத்திற்கு உண்டான பில்டிங் மெட்டிரியல் மற்றும் இதர செலவுகளுக்கு வேண்டி ரொக்க பணம் தேவைப்படுவதாகவும், அதற்கு ரொக்க பணம் கொடுத்தால் இரண்டு மடங்கு பணம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக செலுத்தப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். அதை நம்பி அங்குராஜ், அம்மாசை இருவரும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் பணம் வாங்கி ரொக்கமாக 1 கோடியே 69 லட்சத்தை சேர்த்துள்ளனர்.

தங்களிடம் பணம் இருப்பதை தெரிவிக்க அலுவலகத்தில் டேபிளில் பணக்கட்டுகளை அடுக்கி வைத்து, விடியோ எடுத்து உதயசங்கர் என்பவர் மூலம் விஜய்கார்த்திக் என்பவருக்கு பணம் இருப்பதை உறுதி செய்துள்ளார்கள். இந்த நிலையில், சிறிது நேரம் கழித்து அங்குராஜ் நூல் கடைக்கு ஐந்து நபர்கள் சென்று தாங்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் அமலாக்கத்துறையில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் 'இந்த இடத்தில் கணக்கில் இல்லாத கருப்பு பணம் கை மாறுவதாக தகவல் வந்துள்ளதாகச் சொல்லி கடையை சோதனை செய்வதாக கூறியுள்ளனர்.

மேலும் அங்கு அவர்கள் வைத்திருந்த 1 கோடி 69 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, கடையில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் ட்ஸ்க் ஆகியவற்றை கழற்றிச் சென்றுள்ளனர். சென்னையில் உள்ளஅமலாக்கத்துறை அலுவலகத்திற்கு 2 ந்தேதி நேரில் வந்து பணத்திற்கு கணக்கு காட்டி பெற்றுக்கொள்ளுமாறு கூறியதுடன் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அங்குராஜ் தரப்பு திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் கே.வி.ஆர்., நகர உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பத்ரா, உதவி ஆய்வாளர்கள் விவேக், ரஜினிகாந்த், கார்த்தி, ராஜேந்திரபிரசாத், விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், நாமக்கல் மாவட்டம் கல்லாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த விஜய் கார்த்திக் என்கின்ற ஜெயச்சந்திரன், தாம்பரம் அடுத்துள்ள சேலையூரைச் சேர்ந்த குப்தா என்கின்ற நரேந்திரநாத், கோவை சுண்டக்காமுத்தூரைச் சேர்ந்த ராஜசேகர், கோவை டாடாபாத் பகுதியைச் சேர்ந்த ராஜூ, சேலம் மேட்டூரைச் சேர்ந்த கோபிநாத், ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து போலீசார் ரூபாய் 88.66 லட்சம் பணத்தை மீட்டுள்ளனர். அமலாக்கத்துறை என்று மோசடி செய்து 1 கோடியே 69 லட்சம் ரூபாயில், நரேந்திரநாத் கோவையில் ரூபாய் 15.57 லட்சம் மதிப்பில் மகிந்திரா தார் என்கின்ற உயர்ரக காரும், விஜயகார்த்திக் என்கின்ற ஜெயச்சந்திரன் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் டொயோட்டா கொரோலா ஆல்டிஸ் காரும், லோகநாதன் புதிதாக ஒன் பிளஸ் ஃபோனும் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு கொள்ளையடித்து விட்டு புது கார் மற்றும் ஃபோன் என வாங்கி ஜாலியாக சுற்றித்திரிந்து உள்ளனர். இவர்களிடம் இருந்து 88.66 லட்சம் ரூபாய் உள்பட கார், போன் என 1 கோடியே 10 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சம்பவம் நடந்து ஏழு தினங்களுக்குள் சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்து, வழக்கில் களவு போன சொத்தினை மீட்ட தனிப்படையைச் சேர்ந்த திருப்பூர் கே.வி.ஆர்., நகர் காவல் உதவி ஆணையர் கார்த்திகேயன், காவல் ஆய்வாளர்கள் கணேசன், பத்ரா உதவி ஆய்வாளர்கள் விவேக், நுண்ணறிவு பிரிவு ரஜினிகாந்த், கார்த்தி, ராஜேந்திரபிரசாத், விஜயகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் காளிமுத்து, தலைமை காவர்கள் பிரகாஷ், சந்தோஷ்குமார், மகாராஜன் மற்றும் முதல்நிலை காவலர்கள் விஜயபாஸ்கர், அனிதராஜ், ராஜசேகர், ஜனார்த்தன்ன், சதீஸ்குமார், ராஜசேகர், விக்னேஷ்குமார சக்திவேல் ஆகியோரை காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ரூ.1 லட்சம் அபராத வழக்கில் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் மன்சூர் அலிகான்! இப்ப என்ன பிரச்சினை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.