ETV Bharat / state

சம வேலைக்கு.. சம ஊதியம்; 2வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 9:34 PM IST

Secondary Teachers Strike: சம வேலைக்குச் சம ஊதியம் கேட்டு சென்னையில் 2வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்து, மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

Secondary Teachers Strike
2வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், 2009 ஜூன் 1ஆம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது.

அதனால் 2009 ஜூன் 1ம் தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8 ஆயிரத்து 370 என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் ரூ.5 ஆயிரத்து 200 எனவும் உள்ளது. மேலும் ஒரே பணி - ஒரே கல்வித் தகுதி என இருந்த போதும், இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதைக் களையக்கோரிக் கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர், நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண் 311ல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.

ஆனால், புதிய அரசு பதவி ஏற்று இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2023 புத்தாண்டின் முதல் அறிவிப்பாகப் போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 3 நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மனுக்கள் அளித்தும், எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் சம வேலைக்கு, சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து நேற்று (பிப்.19) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வருகின்றனர்.

நேற்று சென்னையில் போராட்டத்தில் ஈட்டுப்பட்ட போது, அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விடுவித்தனர். இந்த நிலையில் நேற்று போராட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் இன்று காலையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தினை கிரிம்ஸ் சாலை வழியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களைக் கைது செய்த போலீசார் மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.

தற்போது, இன்று (பிப்.20) நடைபெற்ற போராட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் இருந்து சுமார் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வேலையைப் புறக்கணிப்புச் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: "டெல்டா மாவட்டங்களில் நெல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்" - அரவை முகவர்கள் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.