ETV Bharat / state

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கட்டிய அணைகள் எத்தனை? - அன்புமணி ராமதாஸ் கேள்வி - Anbumani Ramadoss

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 7:41 AM IST

Anbumani Ramadoss
அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் எத்தனை அணைகள் கட்டப்பட்டுள்ளது என அமைச்சர் துரைமுருகனை நோக்கி கேள்வியெழுப்பிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாஜக, காங்கிரஸ் என எந்த கூட்டணியில் இருந்தாலும் இஸ்லாமியர்களின் உரிமையை மீட்டெடுப்போம் என தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை: இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால், பல்வேறு அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலுவை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், "இந்த பாஜக - பாமக கூட்டணி முடிவு அவசியமானது மற்றும் காலத்தின் கட்டாயம். தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, பொதுநல வழக்கு தொடுத்து மூடியவர், வேட்பாளர் கே.பாலு. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றபோது, டெல்லி சென்று வழக்காடி இந்திய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளை மூடினார்.

மதுக்கடைகளுக்கு மதுவை விற்பனை செய்பவர் தான், அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன். அவர் மிகப்பெரிய பீர் தொழிற்சாலையை வைத்துள்ளார். கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தடையாக பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றோம்.

இஸ்லாமிய மக்களின் உரிமைகளை பாஜக, காங்கிரஸ் என எந்த கூட்டணியில் இருந்தாலும் மீட்டெடுப்போம். அது எங்கள் கடமை, கொள்கை. அதனை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். குரானில் மது குறித்து கூறியுள்ள மரபுகளை மீறி, மதுவை வணிகம் செய்யும் அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு, இஸ்லாமியர்கள் வாக்களிக்கப் போகிறீர்களா?

அதிமுக மற்றும் திமுக மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். 2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சிக்கு முன்னோட்டம் தான், இந்த தேர்தல். விவசாயிகள் தான் என்னுடைய கடவுள். திமுக, அதிமுகவிற்கு விவசாயிகள் குறித்து கவலையே கிடையாது. வடிவேலு படத்தில் கிணற்றைக் காணோம் என்ற காமெடியைப் போல, கொஞ்ச நாட்களில் ஆற்றை காணோம் என்ற நிலை வரப்போகிறது.

ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தடுப்பணை கட்டுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் கட்டுவதில்லை. அமைச்சர் துரைமுருகன் இதுவரையில் ஒரு அணையைக் கட்டியுள்ளாரா? தமிழகத்தில் 223 கி.மீ. தூரம் ஓடும் பாலாற்றில், புதியதாக அணை கட்டவில்லை; தென்பெண்ணை - பாலாற்றை இணைத்துவிட்டால், பாலாற்றில் நிச்சயம் தண்ணீர் வரும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலைகள்; உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கத் தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை! - Ban On Online Gambling

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.