ETV Bharat / state

சவுக்கு சங்கரை கண்டித்து அரியலூரில் பெண்கள் ஆர்ப்பாட்டம்! - SAVUKKU SHANKAR CASE UPDATE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 8:57 PM IST

Savukku Shankar Case: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சவுக்கு சங்கரை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சவுக்கு சங்கர் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் புகைப்படம்
சவுக்கு சங்கர் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் புகைப்படம் (credit to ETV Bharat Tamil Nadu)

அரியலூர்: பெண் காவலர்களை தரக்குறைவாகப் பேசிய யூடியூபர் சவுக்கு சங்கருக்குக் கடுமையான தண்டனை வழங்கக்கோரி ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாதர் அமைப்பான, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே மாவட்ட தலைவர் முருகேஸ்வரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சவுக்கு சங்கரைக் கண்டித்தும், பெண்களை இழிவாகப் பேசியதற்காக அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமெனவும் பெண்கள் கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேனியிலிருந்த சவுக்கு சங்கரைக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கடந்த மே 04ஆம் தேதி கைது செய்தனர். சவுக்கு சங்கரை அழைத்துவரும் வழியில் காவல்துறை வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

பின்னர், சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் கோவை அழைத்துச் சென்றனர். அதன்பின், அவர் மீது 294(b), 509 மற்றும் 353 இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) r/w பிரிவு 4 தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 பிரிவு 67 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், தேனியில் உள்ள ஒரு விடுதியிலிருந்த சவுக்கு சங்கர் காரிலிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அவர் மீதும், அவரது உதவியாளர்கள் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய இருவர் மீதும் இரண்டு பிரிவுகளில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: திருப்பதியில் ஆர்ஜிதா சேவாக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங்.. ஏழுமலையானை அருகே தரிசிக்க விண்ணப்பிப்பது எப்படி? - TTD Online Ticket Booking

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.