ETV Bharat / state

“அது பம்மாத்து அறிக்கை” - அதிமுக அறிக்கையை விமர்சித்த மு.க.ஸ்டாலின்! - MK STALIN SLAMS BJP AND AIADMK

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 10:38 PM IST

MK Stalin Slams BJP and ADMK: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் ச.முரசொலி மற்றும் நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

mk-stalin-slams-bjp-and-admk-in-tiruvarur-dmk-election-campaign-meeting
இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்வதற்கான தேர்தல் இது - மு.க.ஸ்டாலின்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் ச.முரசொலி மற்றும் நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசும்போது, "நானும் டெல்டாகாரன்" என்ற பெருமையோடு, சொந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன், தலைவர் கருணாநிதி பிறந்த திருக்குவளை - வளர்ந்த திருவாரூர் - வென்ற தஞ்சாவூர் - உள்ளடங்கிய நாடாளுமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம் தொகுதிகளுக்கு வந்திருக்கிறேன்.

உதாரணத்திற்கு, ஒன்று சொல்கிறேன். எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்கள் சைதாப்பேட்டையை சேர்ந்த ஒரு தாய்மார், “எனக்கு 58 வயது ஆனது, இதுவரைக்கும் யாருக்கும் கடிதம் எழுதியது இல்லை, என் வாழ்க்கையில் முதல் கடிதம் இது! நிறைய வருடமாக திருவண்ணாமலையில் இருக்கும் நிலத்துக்கு பட்டா வாங்க முடியாமல் தவித்தேன். முதல்வரின் முகவரிக்கு மனு அனுப்பிய 15 நாட்களில் எந்தவிதமான கஷ்டமும் இல்லாமல், பட்டா கிடைத்துவிட்டது” என்று நன்றி சொல்லி எழுதியிருக்கிறார்கள்!

இப்படி, எத்தனையோ நல்ல திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்… அதெல்லாம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான திட்டங்கள்! சிலவற்றை பற்றி மட்டும் சொல்ல வேண்டும் என்றால்,

  • தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு, மாதா மாதம் 1000 ரூபாய் வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!
  • தமிழ்நாடு முழுவதும் 16 இலட்சம் குழந்தைகள் பசியில்லாமல் பாடம் படிக்க, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்!
  • அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு வரும், உங்கள் மகள்களுக்கு, மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்!
  • இன்னும் கூடிய விரைவில் ஆண் மாணவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்க இருக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம்!
  • வேலைக்குச் செல்லும் பெண்களின் சுமையைக் குறைத்து, அவர்கள் மாதம் 900 ரூபாய் வரை சேமிக்க உதவியாக இருக்கும், விடியல் பயணத் திட்டம்!
  • 26 இலட்சம் இளைஞர்கள் திறன்பயிற்சி பெற்ற, நான் முதல்வன் திட்டம்!
  • இதில், தேர்தல் அறிக்கையில் சொல்லிய வாக்குறுதிகளை மட்டுமல்ல, சொல்லாத பல திட்டங்களையும் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாகத்தான், சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு, இலவச வீட்டுமனையும் வழங்கி, வீடு கட்டுவதற்கான தொகையை அவர்களின் வங்கிக் கணக்கிற்கே செலுத்தும் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

இந்தத் திட்டத்தில் அதிகமாக பயன்பெறப்போவது திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட மக்கள்தான்! இவ்வாறு, ஒவ்வொரு குடும்பத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையிலும், வெளிச்சம் பாய்ச்சும் விடியலைத்தான் நம்முடைய ”திராவிட மாடல்” அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பாஜக குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, "நடைபெற இருக்கும் தேர்தல் மிகமிக முக்கியமான தேர்தல். ஏதோ பா.ஜ.க., ஆட்சியை வீழ்த்துவதற்கான தேர்தலாக மட்டும் யாரும் இதை நினைத்துவிடக் கூடாது. இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்வதற்கான தேர்தல் இது!

இந்தியாவின் மாநிலங்களை - மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை-எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், பா.ஜ.க., இன்னொரு முறை ஆட்சிக்கு வரக் கூடாது. பா.ஜ.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது.

நாட்டில் ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. இவ்வளவு ஏன், மாநிலங்களே இருக்காது. முதலில் நாம் எல்லாரும் இதை உணர வேண்டும். கண்ணுக்கு முன்னால் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டதைப் பார்த்தோம்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். அங்கு இருக்கின்ற மக்களின் விருப்பத்திற்கு மாறாக யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். அரசியல் கட்சித் தலைவர்களையே, வீட்டுச் சிறையில் அடைத்தார்கள். முன்னாள் முதலமைச்சர்களும் இதற்குத் தப்பவில்லை. அங்கு சட்டமன்றம் கிடையாது. காஷ்மீருக்கு ஐந்து ஆண்டுகளாக தேர்தல் கிடையாது. இப்போதுகூட, ஜம்மு-காஷ்மீருக்குத் தேர்தல் அறிவிக்கவில்லை. இதுதான் பா.ஜ.க. பாணி, சர்வாதிகாரம்!

இந்த நிலைமை நாளை தமிழ்நாட்டிற்கும் ஏற்படலாம். ஏன், பா.ஜ.க., மீண்டும் வெற்றி பெற்றால் இதே நிலைதான் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும். இது ஏதோ எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மட்டுமல்ல. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கே இந்த ஆபத்து வரத்தான் செய்யும். 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாசிச பா.ஜ.க., இந்தியாவை எல்லா வகையிலும், மிகமோசமான வகையில் பாழ்படுத்திவிட்டது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் இருந்த எல்லாக் கட்டமைப்புகளையும் சிதைத்துவிட்டார்கள்.

  • ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டில் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றினாரா? இல்லை!
  • கருப்புப் பணத்தை மீட்பேன், மீட்டு வந்து 15 இலட்சம் ரூபாய் வரை இந்தியர்களுக்குத் தருவேன் என்றார். தந்தாரா? 15 இலட்சம் வேண்டாம், 15 ஆயிரமாவது தந்தாரா? 15 ரூபாயாவது தந்தாரா? இல்லை!
  • இதைக் கேட்டால், உள்துறை அமைச்சர் பேட்டியில் சொல்கிறார். அது, 'சும்மா தேர்தலுக்காக கூறினோம்' என்று சொல்லி முடித்துவிட்டார்.
  • அடுத்து, ஒன்று கூறினார்கள்… ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று கூறினார்கள். வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? இல்லையே!
  • படித்த இளைஞர்கள் 'பக்கோடா' விற்கலாம் என்று பிரதமர் பேசுகிறார்.

தன் கையில் கிடைத்த அதிகாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தவறாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்வது மட்டுமல்ல, நாட்டையே நாசம் செய்துவிட்டார். இனியும் மோடி ஆட்சி தொடர்வது, தமிழ்நாட்டுக்கு அழிவு! இந்தியாவுக்கும் நல்லதல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நம்முடைய ”திராவிட மாடல்” ஆட்சி மக்கள் பணிகளை எல்லாம் எந்த தொய்வில்லாமல் நாம் செய்து கொண்டிருக்கிறோம்" என தெரிவித்தார்.

அதிமுக குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, "நேற்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்! ஆட்சிப் பொறுப்பு கையில் வைத்திருந்தபோது, மக்களுக்கு ஒன்றுமே செய்யாத பழனிசாமி - ஒன்றிய அரசில் பா.ஜ.க.-வுடன் சேர்ந்து, தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாமல், துரோகங்களை மட்டுமே செய்த பழனிசாமி – அவர் பங்கிற்கு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அது தேர்தல் அறிக்கை அல்ல; பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை! அவரிடம் அதிகாரம் இருந்தபோது, ஒன்றிய அரசிடம் இருந்து உருப்படியாக எதையாவது பெற்றுத் தந்தாரா? பா.ஜ.க.-வின் பாதம் தாங்கியாக, உதவாக்கரையாக இருந்த பழனிசாமி, இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா?

  • ஆளுநரை நியமிக்கும்போது, முதலமைச்சரின் ஆலோசனை பெற்று நியமனம் செய்ய வேண்டும்” என்று தி.மு.க. சொன்னதையே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார்.
  • நான் கேட்கிறேன், பழனிசாமி அவர்களே… தி.மு.க. அரசுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறாரே ஆளுநர்… அவரைக் கண்டித்து ஒருநாளாவது ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறீர்களா? இல்லையே!
  • அ.தி.மு.க. ஆட்சியில், ஆளுநர் ஆய்வுக்குச் செல்கிறேன் என்று புறப்பட்டபோது, அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது தி.மு.க.!
  • தொல்லை தருவதையே தன்னுடைய அன்றாடப் பணியாக வைத்திருக்கும் ஆளுநருக்கு எதிராக இப்போதும் உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று போராடுகிறது தி.மு.க.!
  • கை கட்டி - வாய் மூடி - முதுகு வளைந்து - பாதம் தாங்கும் பழனிசாமி அவர்களே…

உங்களுக்கு வீரவசனங்கள் தேவைதானா? மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை; அந்தச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஓட்டு போட்டதால்தான் அந்தச் சட்டமே இன்றைக்கு அமலுக்கு வந்திருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் வரக் காரணமாக இருந்துவிட்டு, ‘இலங்கை தமிழர்களுக்கான இரட்டைக் குடியுரிமை கொண்டு வருவோம்’ - என்று சொல்வதற்குப் பெயர் என்ன? பித்தலாட்டம்தானே!

அடுத்து ஒன்று சொல்கிறார்… "மதுரையில் நிறுவப்பட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்படுமாம்!" - பழனிசாமி சொல்கிறார். ஆகா என்ன நாடகம் இது ஆகா என்ன நாடகம் இது!

பழனிசாமி அவர்களே… 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் திறப்பு விழாவில் மோடி பட்டன் அழுத்தியபோது பக்கத்தில் உட்கார்ந்து கை தட்டினீர்களே… அதற்குப் பிறகு எய்ம்ஸ் அமைக்காமல் ஏன் இழுத்தடிக்கிறீர்கள் என்று ஒரு முறையாவது ஒன்றிய அரசின் கதவைத் தட்டியிருப்பீர்களா?

இவ்வளவு ஆண்டுகளாக இது எதையுமே செய்யாமல் இப்போது வந்து நீங்கள் போடும் இந்த பகல் வேஷம் பா.ஜ.க.-வுக்கான பசப்பு நாடகம் தான் என்று மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்!

நாட்டில் விவசாயிகளுக்கு பாஜக மற்றும் அதிமுக துரோகம் செய்து வருவதாக மு.க.ஸ்டாலின் பேச்சு,

  • உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன் என்று கூறினார். ஆனதா? இல்லை!
  • மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தார்கள். இதெல்லாம் கூறியபோது, பாதம்தாங்கி பழனிசாமி என்ன கூறினார்? “விவசாயிகள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். நான் அவர்களுடன் விவாதம் நடத்தத் தயார்'' என்று கூறினார்.
  • 'நானும் ஒரு விவசாயி' என்று பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு, பச்சைத் துரோகம் செய்தவர்தான் பழனிசாமி!
  • மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக ஒன்றரை ஆண்டு காலம் உழவர்கள் தலைநகர் டெல்லிக்கு வந்து போராடினார்கள். வெயிலிலும், கடும் குளிரிலும் படுத்திருந்த உழவர்கள் ஏராளமான பேர் பலியானார்கள். அவர்களை எல்லா வகையிலும் சித்திரவதை செய்தது பா.ஜ.க. அரசு.
  • இது எதற்கும் அஞ்சாமல், பின்வாங்காமல் அவர்கள் நின்றதை பார்த்துதான் மூன்று வேளாண் சட்டங்களை இறுதியில் பா.ஜ.க. வாபஸ் வாங்கியது.
  • அப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு உழவர்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், அது எதையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை.
  • அதனால் மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டத்தைத் தொடங்கிவிட்டார்கள். டெல்லிக்குள் அவர்கள் நுழைந்துவிடுவார்களோ என்று பயந்து இரும்பு முள்வேலி, சாலைகளில் ஆணிப் படுக்கை அமைத்திருக்கிறது பா.ஜ.க. அரசு.
  • பாகிஸ்தான் பார்டரை விட, மோசமான சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதுவரை நான்கு உழவர்கள் இறந்துவிட்டார்கள்.
  • இந்திய நாட்டுக்குள் ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளைவிடச் சொந்த நாட்டு விவசாயிகள்தான் பிரதமர் மோடியின் கண்ணுக்கு எதிரிகளாகத் தெரிகிறார்கள்.
  • ஏழைத் தாயின் மகன் என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஆட்சியில் விவசாயிகள் நிலைமை இதுதான்.
  • தமிழ்நாட்டு உழவர்களையாவது நிம்மதியாக இருக்க விட்டாரா பிரதமர் மோடி? அதுவும் இல்லை.
  • காவிரி பிரச்சினையில் பா.ஜ.க.-வும் – அ.தி.மு.க.-வும் செய்த துரோகங்களை டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த உங்களால் மறந்திருக்க முடியாது.

காவிரியில் தமிழ்நாட்டு உரிமைகளுக்காகத் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எத்தனையோ செய்திருக்கிறார்… காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று, 1969-ஆம் ஆண்டு முதன்முதலாகக் குரல் கொடுத்ததில் இருந்து, காவிரி இறுதித் தீர்ப்பு வாங்கியது வரைக்கும், டெல்டா உழவர்களுக்காகத் தலைவர் பாடுபட்டது அத்தனையும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்!

ஆனால், அ.தி.மு.க.-வும், பா.ஜ.க.-வும் செய்தது என்ன? வரலாற்றுப் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாமா?

காவிரி பாசன உழவர்களின் பாரம்பரிய உரிமையைக் காக்க, காவிரி மன்ற இறுதித் தீர்ப்பில் கூடுதலாக 60 டி.எம்.சி. நீர் கோரி 2007-ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு சிறப்பு முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கைக்கூட அடுத்து வந்த அ.தி.மு.க. அரசு ஒழுங்காக நடத்தவில்லை.

ஒன்றிய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தில் என்ன சொன்னார்கள்? "காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது" என்று வாதாடினார்கள்!

அதுமட்டுமா சொன்னார்கள்? ”காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்த் தகராறு சட்டத்தில் இதற்கான பல்வேறு விதிகள் இருக்கிறது. இதுகுறித்து உத்தரவிட உச்சநீதிமன்றத்துக்கே அதிகாரம் இல்லை. எனவே, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்" என்று உச்சநீதிமன்றத்தில் மனு போட்ட அரசு ஒன்றிய பா.ஜ.க., அரசு.

''இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று ஒன்றிய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் கூறினார்.

அதிகாரம் உண்டு என்று சொல்லி காவிரி உரிமையை நிலைநாட்டியது உச்சநீதிமன்றம்தான்.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உறுதி செய்து 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அப்போதும், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையில் 14.75 டி.எம்.சி.யை விட்டுக் கொடுத்தது பழனிசாமிதான்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உடனடியாக நீர் தாவா முறைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள்தான் நமக்கு வாக்களிப்பதில்லையே என்று ஒன்றிய பா.ஜ.க., இதைச் செயல்படுத்தவில்லை.

உடனடியாகக் காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்று போராடியதும் தி.மு.க.தான்.

தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக் கொடி காட்டினோம். ”கோ பேக் மோடி” என்று சொன்னோம். நான் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டேன். இரண்டு குழுக்களாக இந்தப் பயணத்தைத் தி.மு.க. நடத்தியது. மதச்சார்பற்ற கட்சிகளோடு ஒன்று சேர்ந்து, நாம் இதை நடத்திக் காட்டினோம்.

திருச்சி முக்கொம்பில் இருந்து நான் பயணம் மேற்கொண்டேன். காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் டெல்லியில்தான் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கூறினோம்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு அதிகாரமற்ற ஒரு அமைப்பை தொடங்கியது. அதையும் பழனிசாமி அரசு தட்டிக் கேட்கவில்லை. ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறையுடன் இதைச் சேர்த்துவிட்டார்கள். அதையும் பழனிசாமி அரசு தட்டிக் கேட்கவில்லை. முதுகெலும்பு இல்லாமல் பா.ஜ.க. அரசுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்தார் பழனிசாமி.

இந்த இரண்டு பேரின் துரோகத்தையும் உணர்ந்து, இவர்களை டெல்டா மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.

ஆனால், இப்போது தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் வாயிலேயே வடை சுடுகிறார். வார்த்தைகளால் வடை சுடுவதில் வல்லவர் பிரதமர் மோடி. வெறுங்கையில் முழம் போடுவதும் அவருக்குக் கை வந்த கலை!

தமிழ்நாட்டில் பல பகுதியில் வரலாறு காணாத மழை பெய்து, கடந்த டிசம்பர் மாதம் பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. பல மாதம் ஆனது. இதுவரை நிவாரண நிதியாக ஒரு சல்லிக்காசு கூட ஒதுக்கவில்லை பா.ஜ.க. அரசு. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கோரினோம். ஒரு பைசாகூட வரவில்லை.

பாதுகாப்பு அமைச்சர் வந்து பார்த்தார். தருவதாகக் கூறினார், தரவில்லை!

நிதி அமைச்சர் வந்து பார்த்தார். தருவதாகக் கூறினார், தரவில்லை!

ஒன்றியக் குழு வந்து பார்த்தது. வாங்கித் தருவதாகக் கூறினார்கள், தரவில்லை!

தமிழ்நாட்டு எம்.பி.க்கள் உள்துறை அமைச்சரை டெல்லிக்குச் சென்று சந்தித்தார்கள்! அவரும் தருவதாகக் கூறினார், தரவில்லை!

ஏன் தரவில்லை? தமிழ்நாட்டுக்குத் தருவதற்கு அவர்களுக்கு மனமில்லை. சமீபகாலமாகத் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை அறிவித்திருந்தால் பாராட்டலாம். தமிழ்நாட்டுக்கு எதையும் தராத மோடிக்குத் தமிழ்நாட்டு மக்களும் தங்களின் வாக்கையும் தர மாட்டார்கள்!

திமுகவின் மேல் மோடிக்கு உள்ள கோபம் குறித்து மு.க.ஸ்டாலின் பேசும் போது,

  • தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் எதையும் வழங்காத மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இது மோடிக்கும் தெரியும்.
  • அதனால்தான், தி.மு.க. மேல் அளவுக்கு அதிகமான ஆத்திரத்தைக் கொட்டுகிறார். மாநிலம் மாநிலமாகச் சென்று தி.மு.க.வை விமர்சித்தார். இப்போது தமிழ்நாட்டுக்கு வந்தும் அதே பல்லவியைப் பாடுகிறார்.
  • தி.மு.க. மேல் ஏன் அவருக்கு இவ்வளவு கோபம்?
  • இந்தியா முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிராகத் தனித்தனியாக இயங்கி வந்த கட்சிகளை ஒன்றிணைக்க நான் காரணமாக இருந்தேன் என்ற ஆத்திரத்தில் தி.மு.க.-வை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.
  • தன்னை எதிர்க்க யாருமில்லை என்று இருந்தவரின் பொழப்பை இந்தியா கூட்டணி கெடுத்துவிட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேராது என்று கனவுலகத்தில் இருந்த மோடியின் தூக்கத்தை இந்தியா கூட்டணி கலைத்துவிட்டது.
  • தூக்கத்தில் இருந்து எழுந்து தி.மு.க.வைத் தரக்குறைவாகப் பேசுகிறார். அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. இதுபோல் எத்தனையோ ஏச்சுகள் - ஏளனங்கள் – அரட்டல்கள் - மிரட்டல்களை பார்த்துப் பழக்கப்பட்டவர்கள்தான் நாங்கள். வசவுகளை வாங்கி வாங்கி உரம் பெற்றவர்கள் நாங்கள்.
  • முன்னாள் முதல்வர் கருணாநிதி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால், பிரதமர் மோடி அவர்களே… நாங்கள் தென்றலைத் தீண்டியதில்லை! ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறோம்!
  • கருப்பு சிவப்புக் கொடியைக் கையிலேந்தி வரும் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்பை இன்னும் தீவிரமாக வேலை செய்ய வைப்பதே இந்த எதிர்த்தாக்குதல்தான். எதிர்த்தாக்குதல் வந்தால்தான் தி.மு.க. தொண்டர்கள் – உற்சாகத்துடன் - வெறியுடன் களப்பணி ஆற்றுவார்கள்.
  • தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் – விரோதமான கட்சி பா.ஜ.க. பா.ஜ.க.வுக்குப் போடும் ஓட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு! அதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.
  • மாநிலத்தைக் கெடுத்த அ.தி.மு.க. - மாநிலத்தைக் கண்டுகொள்ளாத பா.ஜ.க. - இரண்டு பேரையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும்.
  • அவர்களுக்கு இன்னும் புரியவில்லை. தமிழர்கள், பா.ஜ.க. மாதிரி, அடக்க நினைப்பவர்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்! அ.தி.மு.க. மாதிரி, அடிமையாக இருப்பவர்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்!

கடந்த இரண்டு தேர்தலில் நிரூபித்த மாதிரியே, இந்தத் தேர்தலிலும் காட்ட வேண்டும்!" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “உச்சநீதிமன்றத்தால் எந்த ஆளுநரும் இப்படியான கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பார்களா?” - ஆர்.என்.ரவியை சாடிய ஸ்டாலின்! - MK STALIN ABOUT RN RAVI

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.