ETV Bharat / state

“பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரண்டியும் இல்லை.. வாரண்டியும் இல்லை" - மு.க.ஸ்டாலின் தாக்கு! - MK Stalin Campaign

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 10:44 PM IST

MK Stalin About Nirmala Sitharaman's Husband Opinion: “இந்தத் தேர்தல் பத்திர ஊழல் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல்” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் கூறியதை, முதலமைச்சர் ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையின் போது மேற்கோள்காட்டி பேசியுள்ளார்.

MK Stalin About Nirmala Sitharaman's Husband Opinion
MK Stalin About Nirmala Sitharaman's Husband Opinion

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கிருஷ்ணன்கோயிலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் திமுக பரப்புரை பொதுக்கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு வாக்கு கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து என்ன செய்கிறார்கள்? ஒன்றிய அரசுப் பணிகளில் மண்டல் பரிந்துரை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது இல்லை. ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் வழங்குவது இல்லை. நாம் கூறும் இதை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் பேசும்போது புள்ளிவிவரத்துடன் கூறினார். ஒன்றிய அரசின் மிக உயர் பொறுப்பில் இருக்கும், அதாவது நம் நாட்டையே நிர்வகிக்கும் 90 செயலாளர்களில் வெறும் 3 பேர்தான், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் குறைவுதான்.

இது நாட்டிலேயே பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்கள் படிப்பதை ,பெரிய பொறுப்புகளுக்குச் செல்வதை, காலம் காலமாகத் தடுத்த இவர்கள், இப்போதும் தங்கள் கையில் ஆட்சியை வைத்திருப்பதால் தடுக்கிறார்கள். அதுக்கு என்னென்ன புதிய சட்டங்கள் வருகிறது? குலக்கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கை.

ஏழை, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு, ஒன்றிய பணிக்கான தேர்வுகளில் தமிழைப் புறக்கணித்து, இந்தித் திணிப்பு,சமஸ்கிருதத் திணிப்பு செய்து, நம்முடைய பிள்ளைகளின் வேலைகளைப் பறிக்கிறார்கள். பொருளாதார அடிப்படையில், இடஒதுக்கீடு என்று ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் ஒடுக்கப் பார்க்கிறார்கள். இப்படி அநியாயமாக நம்முடைய உரிமைகளை பறிக்கும் கூட்டம்தான் பா.ஜ.க. அதனால் தான் கூறுகிறோம். பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேறுவதை பா.ஜ.க. எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளாது.

இதனால்தான் ஒன்றிய அளவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கேட்கிறோம், போராடுகிறோம். அதையாவது செய்கிறார்களா? அதையும் மறுக்கிறார்கள். இதனால்தான் கூறுகிறோம், நாட்டின் சிறுபான்மையினருக்கும் மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரி பா.ஜ.க.தான் என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன்.

வரலாறு காணாத ஊழல்களைச் செய்துவிட்டு, அதை மூடி மறைக்க அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளைக் கூட்டணியாகச் சேர்த்துக் கொண்டார்கள். இப்போது பா.ஜ.க.வை ஆட்டம் காண வைக்கும் ’இமாலய ஊழலான’ தேர்தல் பத்திர ஊழல் வெளியாகி இருக்கிறது.

அதிலும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில், இந்தத் தேர்தல் பத்திர ஊழல் என்பது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் என்று கூறியுள்ளார். ஏற்கனவே அவர், பா.ஜ.க. ஆட்சி நம்முடைய நாட்டை எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறார் என்று - ”புதிய இந்தியா எனும் கோணல் மரம்” என்ற புத்தகத்தில் கவலையுடன் எழுதியிருக்கிறார். ” புதிய இந்தியா பிறந்துவிட்டது” என்று பா.ஜ.க. கட்டமைக்கும் பிம்பம் எப்படி மோசமானது என்று நாளுக்கு நாள் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் தன்னாட்சி அமைப்புகளைக்கூட, பா.ஜ.க.வின் ஆதரவு கட்சிகள்போல் செயல்பட வைத்து, அரசியல் சட்டப்படிதான் ஆட்சி நடக்கின்றதா என்ற சந்தேகத்தை பா.ஜ.க. ஆட்சி உருவாக்கிவிட்டார்கள். பா.ஜ.க. ஆட்சியால் இந்திய நாட்டு மக்களுக்கு நடந்த நன்மை என்று ஒன்றாவது இருக்கிறதா? தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும், தமிழுக்கும் துரோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், வாக்கு கேட்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார். பிரதமராவதற்கு முன்னால் தமிழ்நாட்டிற்கு வாக்கு கேட்டு வந்தபோது, பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தாரே? அதில் எதையாவது செய்தாரா? இல்லையே.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024; தமிழ்நாட்டில் 1,749 பேர் வேட்பு மனு தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.