ETV Bharat / state

புதுச்சேரியில் காணாமல்போன சிறுமி 4 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு.. உறவினர்கள் வாக்குவாதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 7:33 PM IST

Updated : Mar 6, 2024, 1:34 PM IST

Missing Girl Dead Body Found in Puducherry: புதுச்சேரியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயமான நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்து வாய்க்காலில் வீசிச் சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Missing Girl Dead Body Found in Puducherry
புதுச்சேரியில் காணாமல்போன சிறுமி 4 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியை சேர்ந்த தம்பதியின் 9 வயது மகள் கடந்த மார்ச் 2-ஆம் தேதி மாலை 6 மணியளவில், தனது தோழிகளுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து சிறுமியை அவரது தாயார் தேடி வந்தபோது, அவர் காணாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் பதறிப்போய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் ஆர்த்தி கிடைக்கவில்லை. இதனை அடுத்து, சோலை நகர் புறக்காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில், சோலை நகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஐந்து தனிப்படைகள் அமைத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சிறுமியைத் தேடி வந்தனர்.

இதனிடையே சிறுமி காணாமல் போய் 3 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்காத காவல்துறையைக் கண்டித்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர் நேற்று (மார்ச் 4) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு, இன்று (மார்ச் 5) மதியம் சிறுமியின் வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்ததுடன், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. மேலும், அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடியதால் பெரும் பதட்டமான சூழல் நிலவியது.

இதுமட்டுமல்லாது, அப்பகுதி மக்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே, போலீசாரைக் கண்டித்து முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே‌ சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: கர்நாடக அரசுக்கு வெடிகுண்டு மிரட்டல்! இமெயிலில் வந்த மிரட்டல்! பின்னணியில் யார்?

Last Updated :Mar 6, 2024, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.