ETV Bharat / state

மதுரையில் பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? - அமைச்சர் பிடிஆர் அளித்த விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 12:30 PM IST

Minister PTR Palanivel Thiagarajan: மதுரை வந்த பிரதமர் மோடியை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலுக்கு, அரசு சார்பில் மோடியை வரவேற்கவே சென்றதாகவும், மோடிக்கும் தனக்கும் தனிப்பட்ட உறவுபோல் போலியான செய்திகளை சிலர் பரப்பி வருதாகவும், முதலமைச்சரின் உத்தரவின் படியே தான் செயல்பட்டதாகவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மதுரையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு எனப் பரவிய தகவலுக்கு எனக்கு வந்த கட்டளையை, அரசாங்கப் பணியை நான் நிறைவேற்றினேன் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் மேற்கு பகுதி 54வது வட்ட கழகம் சார்பில் மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத் திருவிழா சூரியச்சுடர்-42 சமூகநீதி முதல்வரின் அடித்தளம், தமிழ்நாடு அவரால் உயர்ந்திடும் என்ற தலைப்பில் கொண்டிதோப்பில் 271 கட்டிடத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், பங்கேற்ற தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது விழா மேடையில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "திராவிட இயக்கத்துக்கு நாங்கள் 4வது தலைமுறையாக பணியாற்றுகிறோம். ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, மக்களுடைய தொடர்பையும் மக்கள் நலனையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது மிகவும் முக்கியம். அரசாங்கத்தில் இருக்கும்போது நிர்வாகத்தை சிறப்பாக நடத்த வேண்டும், அரசாங்கத்தில் இருக்கிறோமோ? இல்லையோ? அரசியல் என்ற அடிப்படையில் மக்கள் நலனை தினமும் காக்க வேண்டும் என்பது நல்ல இயக்கத்தின் கடமையாகும், அடையாளமாகும்.

அரசாங்கத்தை சிறப்பாக நடத்துவது என்பது சாதாரண பணி கிடையாது. அதையெல்லாம் கடந்துதான் நாங்கள் முதலமைச்சரோடு பணி செய்து வருகிறோம். இன்று கூட ஒரு நாளிதழில் எனக்கும் பிரதமருக்கும் தனி உறவு இருப்பதுபோல செய்தி வந்தது. முதலமைச்சர் கொடுத்த பணியை தான், நான் செய்தேன். அதனால்தான், மதுரைக்குச் சென்று பிரதமரை வரவேற்று வழி அனுப்பி வைத்தேன். இதில் எந்த அரசியலும் கிடையாது; அரசாங்கத்தின் பணியை நான் செய்தேன்' என்று விளக்கமளித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், '10 ஆண்டுகள் மோடி அரசாங்கம் டெல்லியில் உள்ளது. 10 ஆண்டுகளில் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார்? எதற்காக வந்து சென்றார்? அரசியல் செய்வதற்காக மட்டுமே பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகிறாரே தவிர, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பலமுறை தமிழ்நாட்டிற்கு வருகிறாரே தவிர, உண்மையான மக்கள் நலனில் அக்கறை இருந்தால் புயல் வந்தபோது சென்னை அல்லது தூத்துக்குடிக்கோ வந்து மக்களை ஏன் சந்திக்கவில்லை' எனக் கேள்வியெழுப்பினார்.

'புயல் பாதிப்பை நேரில் கண்காணிக்கவில்லை, பிரதமர் வருவதால் யாருக்கு புளி கரைக்கிறதோ? என்னவோ எங்களை பொறுத்தவரை பிரதமர் அரசியல் மட்டும் செய்யாமல் அரசாங்கம் ரீதியாகவும் தமிழ்நாட்டிற்கு சிறப்பான கவனம் செலுத்தி எங்கள் தேவைகளை நியாயமான கோரிக்கைகளையும் வேண்டுகோள்களையும் கவனத்தில் கொண்டு ஒழுங்காகவும் நியாயமாகவும் செயல்பட்டால் நாங்கள் பாராட்டுவோம்.

ஜனநாயகத்தின் முக்கியப் பொறுப்பில் பிரதமர் இருக்கிறார். அதனால் அவரை வரவேற்கவும், உதவி செய்வதற்காகவும், வழி அனுப்புவது பொறுப்பு வகிக்கும் அரசாங்கத்தின் வேலை. அதன் அடிப்படையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து இந்த பணியை செய்ய எனக்கு கட்டளை வந்தது. அதை நான் நிறைவேற்றினேன். அது அரசாங்கத்தின் பணி தனிநபரின் விருப்பமோ? அரசியலோ? கிடையாது.

தேர்தல் பத்திரம் தொடர்பாக கூடுதல் அவகாசத்தை எஸ்பிஐ (SBI) கேட்டுள்ளது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 'நானும் 20 ஆண்டுகள் வங்கியில் பணியாற்றினேன். இவ்வளவு பெரிய ஒரு பொருளாதார நாட்டில் இருப்பதில் பெரிய வங்கிக்கு இவ்வளவு கம்மியான தகவலை 3 அல்லது 6 மாதத்தில் அளிக்க முடியவில்லை என்றால் அதைக் கேட்கும்போது நடுங்குகிறது. அப்போது வங்கிகள் சிஸ்டமே ஒழுங்காக இருக்கிறதா? இல்லையா? என்று பயம் வருகிறது.

இதெல்லாம் கேவலமான சப்மிஷன். நீதிமன்றத்திற்கு இதையெல்லாம் தூக்கி வீசிவிட்டு நாளை வந்து கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அந்த அளவிற்கு கம்ப்யூட்டர் சிஸ்டம் இருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் வங்கி தொழிலில் இருக்கக்கூடாது' என அவர் ஆவேசமாக பதிலளித்து விட்டுச் சென்றார்.

சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? - கரும்பு விவசாயி சின்னம் குறித்து நா.த.க காளியம்மாள் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.