ETV Bharat / state

பதவி உயர்வு விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அறநிலையத்துறை செயலர் ஆஜராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 3:08 PM IST

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

Contempt of court case: பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ஓய்வு பெற்ற அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் சென்னை உயர்நீதமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், "தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக 1996ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டு, பின்னர் 2005ல் துணை ஆணையராகவும், 2010ல் இணை ஆணையராகவும், 2015ல் கூடுதல் ஆணையராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கூடுதல் பதவி உயர்வு பெற உரிய கல்வித் தகுதிகள் இருந்தும் 2016ல் மீண்டும் இணை ஆணையராக பணியில் அமர்த்தப்பட்டேன். தன்னுடன் பணிபுரிந்த வாசுநாதன் மற்றும் திருமகள் ஆகியோர் கூடுதல் ஆணையர்களாக நியமிக்க கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூடுதல் ஆணையராக நியமிக்க உத்தரவிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், இணை ஆணையராகவே பணியில் இருந்து ஓய்வு பெற்றதால், கூடுதல் ஆணையராக பதவி உயர்வு அளித்து, அதற்கான பணப்பலன்களை அளிக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பட்டூ தேவானந்த் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, "இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் இருவரும் வரும் மார்ச் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, விளக்கமளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு; கோரிக்கை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு - விசாரணை தேதி தள்ளிவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.