ETV Bharat / state

"இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும்" - மதிமுகவின் பம்பரம் சின்னத்திற்கு தொடரும் சிக்கல்.. நீதிமன்ற உத்தரவு என்ன? - Mdmk Symbol Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 2:41 PM IST

Mdmk Symbol: நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கில் பம்பரம் சின்னம் பொதுப்பட்டியலில் உள்ளதா? என தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MEDRAS HIGH COURT
MEDRAS HIGH COURT

சென்னை: மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில்,"கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டதாகவும், 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றதாகக் கூறி கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது போல, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்ததாக சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு (மார்ச் 07), மதிமுக தேர்தல் சின்னம் வழக்கில் இரண்டு வாரங்களில் முடிவெடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 28ம் தேதி கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தேர்தல் ஆணையம் தங்கள் கட்சியின் நிர்வாகிகள் விவரங்களை கேட்டு மார்ச் 21ம் தேதி அனுப்பிய கடிதம் மார்ச் 25ம் தேதி பெறப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் இல்லாத நிலையில் தங்களால் விளக்கம் அளிக்க முடியாது.

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போதுமான நிர்வாகிகள் பட்டியல் வரவு செலவு விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் விளக்கம் கேட்பதை ஏற்க முடியாது" என தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,"அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கான அங்கீகாரத்தை மதிமுக இழந்து விட்டது. அதனால், தேர்தல் அதிகாரி அளிக்கும் பொது சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். விதிகளின் படி சின்னம் கோரும் கட்சிகள் குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்" என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், தேர்தல் விதிகளின் படி குறைந்தது 6 ஆண்டுகள் அங்கீகாரம் இல்லாமல் இருந்தால் சின்னத்தை கேட்க முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாற்று சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக தற்போது எப்படி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கூற முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள். தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டு இன்று (மார்ச் 26) பிற்பகல் விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: மீனவர் வீட்டில் தேநீர் அருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. வாக்கு சேகரிப்பின் போது நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.