மதுரை: மதுரை - ஓஹா வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்து நிலையில், தற்போது பிப்ரவரி மாதம் வரை ரயிலின் சேவையை நீட்டிப்பதாக நேற்று (பிப்.2) தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் வழியாக இயக்கப்படும் மதுரை - ஓஹா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது.
அதன்படி, ஓஹாவில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் முற்பகல் 11.45 மணிக்கு மதுரை வந்து சேரும். ஓஹா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (09520) பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 26 வரை இயக்கப்படும். மறு மார்க்கத்தில் மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 1.15 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.20 மணிக்கு ஓஹா சென்று சேரும்.
மதுரை - ஓஹா வாராந்திர சிறப்பு ரயில் (09519) பிப்ரவரி 9 முதல் மார்ச் 1 வரை இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது" என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆய்வகப் பணியாளர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை