ETV Bharat / state

5,765 கீழடி அகழாய்வுப் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 5:42 PM IST

Etv Bharat
Etv Bharat

Excavated materials: இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வுப் பொருட்களை மத்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வின்போது 5,000க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இதனை தமிழக அரசிடம் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் கனிமொழி மதி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2016ஆம் ஆண்டு பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை, மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணியை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அகழாய்வின்போது 5,000க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன.

இந்நிலையில், திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, 3ஆம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் இல்லை என தெரிவித்தார்.

முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில், கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார்.

மேலும், கீழடி அகழாய்வு பணிகளைக் கண்காணிக்கும் அதிகாரியாக மீண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமனம் செய்ய வேண்டும். கீழடியில் நடைபெற்ற 2 கட்ட அகழாய்வில் 2200 ஆண்டு பழமையான 5,000க்கும் அதிகமான பழங்காலப் பொருட்கள் மத்திய அரசிடம் உள்ளது. அதனை மீண்டும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், அங்கேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்" என கடந்த 2016ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்க பூர்வாலா மற்றும் தனபால் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் கனிமொழி மதி ஆஜராகி, “கீழடியில் மத்திய அரசு அகழாய்வு செய்தபோது கிடைத்த 5,000க்கும் மேற்பட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கீழடி அகழாய்வுப் பணிகளைக் கண்காணித்து மேற்கொள்ள அதிகாரியாக அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமனம் செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

இதனையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2017ஆம் ஆண்டு கவுகாத்தி மாற்றம் செய்யப்பட்டு, அதன் பின்பு கோவா, பிறகு சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தென்னிந்தியக் கோயில்கள் தொல்லியல் கண்காணிப்பாளராக உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், “கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கீழடி 2 கட்ட அகழாய்வில் மொத்தம் 5,765 பொருட்கள் கிடைத்தன. அவை அனைத்தும் இந்திய தொல்லியல் கண்காணிப்பாளர் சென்னை அலுவலகத்தில் உள்ளது. விரைவில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும்" என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னையில் பணியமர்த்தப்பட்டு உள்ளார். அதில் எந்த முடிவும் எடுக்க முடியாது. மேலும், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து மத்திய அரசு 9 மாதங்களில் கீழடியில் நடத்திய 2 கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட உள்ளது.

9 மாதங்களில் கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிட்ட பின்பு, இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வுப் பொருட்களை மத்திய அரசு, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும், அதனை மாநில அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு.. வினாத்தாள் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.