ETV Bharat / state

நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி மனு..நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு - Nainar Nagendran

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 1:07 PM IST

Nainar Nagendran: குற்ற வழக்கு தொடர்பான ஆவணங்களை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்ததாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nainar Nagendran
Nainar Nagendran

சென்னை: நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திருநெல்வேலி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இதனிடையே, ஏப்ரல் 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதில், நயினார் நாகேந்திரனின் கார் ஓட்டுநர் சதீஷ் மற்றும் உதவியாளர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதனை அடுத்து, இம்மாதம் 22ஆம் தேதி தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 'நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவில் தன் மீதான குற்ற வழக்கு தொடர்பான தகவலை மறைத்துள்ளார்.

மேலும், தனது சொத்து கணக்கையும் மறைத்துள்ளார். இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. இதையடுத்து அவரது வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என்று தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்குமாறு உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் சேர்ப்பு பணிகள் முடிந்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து விட்டது.

தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மேலும், மனுதாரர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும், அவர் திருநெல்வேலி தொகுதி வாக்காளரும் இல்லை" எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தாம்பரத்தில் சிக்கிய ரூ.4 கோடி யாருடையது?... கோவர்தன் மகன் வாக்குமூலத்தால் திருப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.