மயிலாடுதுறை: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை அறிமுகப்படுத்தி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், அரசுக் கொறடா கோவி.செழியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கமிஷனிற்கு வாக்கு கேட்டுச் சிறப்புரையாற்றினர்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "தேர்தலை மிகப் பெரிய காலத்தில் சந்திக்க இருக்கிறோம். ஆனாலும் பத்தாண்டுக் காலம் பாசிச பாஜக கையில் ஆட்சி இருந்து இன்றைக்கு இந்தியாவினுடைய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒவ்வொரு வீட்டிற்கும் தேர்தலுக்கு இடையில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது வாக்காளர்களைச் சந்திக்க வேண்டுமென உங்களை நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல் ஊராட்சி அளவில் தேர்தல் பணிக்குழுவினை அனைத்து தோழமைக் கட்சிகளுடன் உடனடியாக அமைத்து ஒவ்வொரு ஊராட்சி செயல்வீரர் கூட்டங்களை நடத்த வேண்டும். அதேபோல் அத்தனை தோழர்களும் நமது நாடாளுமன்ற வேட்பாளர் ஆர். சுதாவாக மாறி பணியாற்றினால் மட்டுமே பாசிச சக்திகளை அடியோடு விரட்டி அடிக்க முடியும் எனப் பேசினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், "ஐபிஎல் நடந்து கொண்டிருக்கிறது. "சி.எஸ்.கே வா ஆர்.சி.பியா" என்று ஒவ்வொருவரும் சொல்வது போல இது எஸ்.எம்.பியா - டி.கே.பியா.
அதாவது சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகாரா, திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசமா என்று ஒரு கை பார்த்து விடுவோம் என்கிற அளவிற்கு இன்றைக்கு களம்கான கேப்டன்களாக கல்யாணசுந்தரமும், நிவேதாமுருகனும் உள்ளனர்.
கடந்த தேர்தலில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தொகுதிகள் 20 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். கூட்டம் நடப்பது உங்கள் இடமாக இருந்தாலும் நாங்கள்தான் அதிக அளவில் ஓட்டுக்கள் பெறுவோம். நாங்கள் அதிகப்படியான ஓட்டுக்கள் பெற்று தீர்வோம். இதேபோல் வெற்றியை அதிகப்படியான ஓட்டுக்களைப் பெற நீங்களும் உழைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளரும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா பங்கேற்காத நிலையில், அவரை விமர்சிக்கும் வகையில் சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு மட்டுமே தாக்கல் செய்துவிட்டுப் போனவர்தான்.
அவரை நாங்கள் தான் வெற்றி பெற வைத்தோம் என பேசியது அக்கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. 19ஆம் தேதி வரை நமது வேட்பாளரை மனசு கோணாமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம். வெற்றி பெற்று வந்தபிறகு நம்மை மனசு கோணாமல் சுதா பார்த்துக் கொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம்.
புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற நினைவில் நாம் உழைக்க வேண்டும். மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் தாக்கல் செய்த 30 வேட்புமனுவில் 13 மனு தள்ளுபடி செய்யப்பட்டு 17 பேர் களத்தில் உள்ளனர்.
எதிரிகளைச் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது. திண்ணை பிரச்சாரம் செய்து கை சின்னத்தை விளம்பரப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைத்துள்ளார். தேர்தல் வந்தால் கிழவிகள் தினத்தைக்கூட மோடி கொண்டாடுவார். எல்லா கிழவிகளுக்கும் பாக்கு வெற்றிலை இலவசமாகக் கூட தருவேன் என சொல்லுவார்கள். எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று வெறியோடு அவர் இருந்து கொண்டிருக்கிறார். அவர் திமுகவை ஒழிப்பேன் என சொல்கிறார். திமுகவை அழிப்பேன், ஒழிப்பேன் என்று சொன்னவர்கள்தான் ஒழிந்து, அழிந்துபோய் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கரை வேட்டி கட்டியவரே இப்படி பண்ணலாமா?" திமுக தொண்டரிடம் ஆதங்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் - Thanga Tamilselvan Campaign