ETV Bharat / state

மீனாட்சி திருக்கல்யாணம் 2024: ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? முழு விவரம் உள்ளே! - madurai meenakshi thirukalyanam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 8:10 PM IST

Madurai Meenakshi Thirukalyanam: சித்திரை பெருவிழாவை முன்னிட்டு நடைபெற உள்ள மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண்பதற்கு வசதியாக கட்டணம் முன்பதிவு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

madurai meenakshi thirukalyanam
madurai meenakshi thirukalyanam

மதுரை: மதுரை மாநகரில் கோலாகலமாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்த நிலையில், மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண்பதற்கு வசதியாக கட்டணம் முன்பதிவு தேதியையும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் புகழ் பெற்ற சித்திரைப் பெருவிழா, வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம், ஏப்.21ஆம் தேதி கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது.

திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, ரூபாய் 200 மற்றும் ரூபாய் 500க்கான கட்டணச்சீட்டுகள் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி (First Come First Serve) என்ற அடிப்படையில், பக்தர்கள் கொள்ளளவிற்கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்று அம்மனைத் தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in மற்றும் இத்திருக்கோயிலின் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகியவற்றில் ஏப்.9ஆம் தேதி முதல் ஏப்.13ஆம் தேதி இரவு 9.00 மணி வரை ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ.500 மதிப்பிலான கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் இரண்டு கட்டணச்சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். ரூ.200 மதிப்பிலான கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் மூன்று கட்டணச்சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். ஒரே நபர் ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணச் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய இயலாது. பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த இயலும்.

எனவே ஒரு கைபேசி எண்ணில் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்ய இயலாது. பாதுகாப்பு காரணங்கள் கருதி குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பக்தர்களின் வசதி மற்றும் விருப்பத்திற்கிணங்க, இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் மேற்படி நாட்களில் நேரடியாக திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கட்டணச் சீட்டு முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் தேசிய அடையாள அட்டையை (Aadhaar Card) ஆளறிச்சான்றாக (Photo ID proof) கொண்டு, தங்களது கைபேசி எண்ணுடன் (Mobile No) மின்னஞ்சல் முகவரி இருப்பின் (E-Mail ID) அதன் விவரம் தந்து முன்பதிவு செய்ய வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட கட்டணச்சீட்டுகளின் எண்ணிக்கையை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்றால், கணினி மூலம் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் (confirmed message) விண்ணப்பித்த பக்தர்களுக்கு அவர்களால் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் அல்லது கைபேசி எண்ணிற்கும் ஏப்.14ஆம் தேதி அனுப்பப்படும்.

இவ்வாறு உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் ஏப்.15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையுள்ள நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி முடிய மதுரை, மேற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு திருக்கல்யாண நுழைவு கட்டணச்சீட்டு விற்பனை மையத்தில் உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது குறுந்தகவலைக் காட்டி, கட்டணச் சீட்டிற்கான தொகையினை ரொக்கமாக செலுத்தி கட்டணச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பின்பு வருபவர்களுக்கு கட்டணச்சீட்டு வழங்க இயலாது. திருக்கல்யாணம் ஏப்.21ஆம் தேதி அன்று காலை 08.35 மணி முதல் 08.59 மணிக்குள் நடைபெறும் என்பதால், ரூ.500 மற்றும் ரூ.200 திருக்கல்யாண நுழைவுக் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அன்று காலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை மட்டுமே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ரூ.500 மதிப்பிலான கட்டணச்சீட்டு பெற்றவர்கள் திருக்கோயில் வடக்கு இராஜகோபுரம் மொட்டை முனீஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியில் அனுமதிக்கப்படுவார்கள். ரூ.200 மதிப்பிலான கட்டணச்சீட்டு பெற்றவர்கள் திருக்கோயில் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே அமைக்கப்பட்ட பாதை வழியாக வந்து வடக்கு இராஜகோபுரம் வழியாக திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெற்றவர்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட இடங்களில் காலை 07.00 மணிக்குள் அமர்ந்து அமைதியான முறையில் திருக்கல்யாண காட்சியைக் கண்டு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் அருள் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது என திருக்கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மகளுக்கு பாலியல் வன்புணர்வு.. குழந்தை பிறந்த நிலையில் தந்தை போக்சோவில் கைது! - POCSO Case In Chennai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.