ETV Bharat / state

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு; 4 நாட்களில் 63,433 ஆசிரியர்கள் விண்ணப்பம்.. நாளை கடைசி நாள்! - Teacher Transfer Consultation

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 9:05 PM IST

Teacher Transfer Consultation: ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 4 நாட்களில் 63 ஆயிரத்து 433 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளிக் கல்வி இயக்ககம் புகைப்படம்
பள்ளிக் கல்வி இயக்ககம் புகைப்படம் (credits to ETV Bharat Tamil Nadu)

சென்னை: பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2024-25ஆம் கல்வியாண்டில் பணியிட மாறுதல் கேட்டு 4 நாட்களில் 63 ஆயிரத்து 433 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பிக்க நாளையே (மே 17) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில், வேறு இடங்களுக்கு செல்வதற்கு மே 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS - ID மூலம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர்.

ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணையவழியாக சமர்ப்பித்திடல் வேண்டும் எனவும், பள்ளிக்கல்வி இயக்ககம் சார்ந்து உயர்நிலை, மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணைய வழியாக சமர்ப்பித்திடல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், நிலுவையின்றி உடனடியாக கல்வி அலுவலர் சரிபார்க்கப்பட்டு, ஏற்பளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலர்களால் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு, முழுமையான வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு நாளை வரை விண்ணப்பம் செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்பதால், எவ்வித விடுதலுமின்றி மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய அலுவலர்களால் நாள்தோறும் நிலுவையில்லாமல் ஏற்பளித்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மே 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலும் தொடக்கக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், இடைநிலை ஆசிரியர்கள் 14 ஆயிரத்து 78 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 7136 பேரும், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்கள் 4 ஆயிரத்து 39 பேரும், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 822 பேரும் என 26 ஆயிரத்து 75 ஆசிரியர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

பள்ளிக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 20 ஆயிரத்து 466 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 14 ஆயிரத்து 308 பேரும், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 913 பேரும், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 952 பேரும், சிறப்பாசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் 719 பேரும் என மொத்தம் 37 ஆயிரத்து 358 ஆசிரியர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

மேலும், தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் 5 ஆயிரத்து 500, பட்டதாரி ஆசிரியர்கள் ஆயிரத்து 100, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஆயிரத்து 200, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 715‌ என மொத்தம் 8 ஆயிரத்து 515 காலிப் பணியிடங்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் சுமார் 5 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் நடைபெறுகிறது.

மேலும் ஒரு ஆசிரியர் பணியிடம் மாறுதல் பெற்ற உடன் அந்த இடம் காலியாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு பின்னர் வரும் ஆசிரியர் அந்த இடத்தை தேர்வு செய்யும் வகையில் காண்பிக்கப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாமக்கல்லில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ஐடி ரெய்டு - காரணம் என்ன? - IT RAID AT NAMAKKAL

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.