ETV Bharat / state

தூத்துக்குடியில் கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகள் மீட்பு.. தென்மண்டல ஐஜி கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 9:46 PM IST

Thoothukudi Child Kidnap Case: தூத்துக்குடி மாநகரில் கடந்த மார்ச் 9ஆம் தேதி கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தையை மீட்க தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், கூடுதலாக மூன்று குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்த முழு விவரங்களை தென்மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

Thoothukudi Child Kidnap Case
Thoothukudi Child Kidnap Case

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அந்தோணியார் கோயில் பகுதியில் உள்ள சாலையில் வசித்து வருபவர், வேலூரைச் சேர்ந்த சந்தியா என்ற கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண். இவர் கடந்த மார்ச் 9ஆம் தேதி அதிகாலை, தனது 4 மாத பெண் குழந்தையுடன் சாலையின் ஓரத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது, மர்ம நபர் ஒருவர் 4 மாத பெண் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார்.

இதனை அடுத்து சந்தியா, தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், காவல்துறையினர் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்தனர். மேலும், குழந்தை கடத்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 17) காவல்துறையினர் சார்பில் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு, தகவல் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் சாமி என்ற கருப்பசாமி (47) என்பவரை, நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நபரான ஆலங்குளம் கரும்பனூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற ராஜா (53) என்பவரையும் நேற்று (மார்ச் 18) கைது செய்தனர்.

இதனை அடுத்து, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியதாகக் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக தென் மண்டல ஐஜி கண்ணன், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது ஐஜி கண்ணன் கூறுகையில், "சமீப காலமாக குழந்தைகளைக் கடத்துவதாக புகார் வந்த நிலையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், குற்றவாளிகள் ரோட்டோரத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள், கோயில்களுக்கு வருகை தரும் குழந்தைகள் என தனியாகவும் மற்றும் பாதுகாப்பு இல்லாமலும் இருக்கக்கூடிய குழந்தைகளைக் கடத்தியுள்ளனர்.

அதன்படி, கடந்த மார்ச் 9ஆம் தேதி கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை, 2022ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் அன்று திருச்செந்தூர் கோயிலில் இரண்டரை வயதுடைய பெண் குழந்தை, 21-10-2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி அன்று குலசை கோயிலில் வைத்துக் கடத்தப்பட்ட மதுரையைச் சார்ந்த அண்ணாமலை என்பவரின் 2 வயதுடைய பெண் குழந்தை மற்றும் புகார் அளிக்கப்படாத ஒரு குழந்தை உள்பட 4 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு குழந்தையைக் காணவில்லை என்று தேடிப்போன போது எங்களுக்கோ 4 குழந்தைகள் கிடைத்தது. இந்த நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் மட்டும்தான் காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னொரு குழந்தையின் பெற்றோர் யார் என்று தெரியவில்லை.

குழந்தைகளைக் கடத்தியது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் சாமி (எ) கருப்பசாமி (47) என்பவரையும் மற்றும் ஆலங்குளம் கரும்பனூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் (எ) ராஜா (53) என்பவரையும் கைது செய்துள்ளோம். இவர்கள் குழந்தைகளைக் கடத்தி குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு விற்று உள்ளனர்.

மேலும், மீட்கப்பட்ட 4 குழந்தைகளையும் 'குழந்தைகள் நல குழு' (Child Welfare Committee) மூலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்க சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேமுதிக யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதிகளில் போட்டி? பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட முக்கிய தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.